"வேற யாரு? எல்லாம் நான்தான்."
"என்ன நீயா?" என்று வாயைப் பிளந்தாள்.
"ஆமான்டிங்கறேன். நானேதான். நான் காலேஜில் சேரப்போனப்போ என்னை அப்ளைடு பிசிக்ஸ்னு ஒரு பாடத்தில் சேரச்சொன்னாங்க. நான் பிசிக்ஸ்ல நல்ல மார்க் வாங்கியிருக்கேன்னு சொன்னாங்க. அந்த கோர்ஸ் படிச்சா நான் ஒரு சயின்டிஸ்டா வரலாம்னு சொன்னாங்க. சரின்னு நானும் சேர்ந்துட்டேன்."
"அப்புறம் எப்படிடி இந்த கோர்ஸ் எடுத்து படிச்சே?"
"நான் எங்கே எடுத்தேன்? காலேஜுக்கு முதல் நாள் போனப்பதான் தெரிஞ்சது அந்த கோர்சில் யாரும் சேரலைன்னு. அதனால் என்னை இந்த கோர்ஸ் சேர்ந்துக்கறியான்னு கேட்டாங்க. நானும் வேறு வழியில்லாமல் சேர்ந்துட்டேன். இல்லைன்னா நான் எப்படி இருக்க வேண்டிய ஆள் தெரியுமா? இந்நேரம் ஒரு சயின்டிஸ்டா ஆகியிருப்பேன்."
ஆ என்று தோழி வாயைப் பிளந்தாள்.
மகாலட்சுமி சிரிக்க வேண்டும் என்றுதான் சுகன்யா இத்தனையும் பேசியதே. ஏனோ மகாலட்சுமி இரண்டு நாட்களாக மிகவும் சோர்ந்து தெரிகிறாள். அவளை கலகலப்பாக்க வேண்டும் என்றுதான் சுகன்யா இந்தக் கதையை அவிழ்த்துவிட்டதே. தோழியின் முயற்சி புரிந்து மகாலட்சுமியும் சிரித்துவிட்டாள். சுகன்யாவினால் பேசாமல் இருக்க முடியாது.
படிப்பை முடித்து வீட்டிற்குச் சென்ற பிறகு அவளைப் பிரிந்து எப்படியிருக்கப்போகிறேனோ என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
பேத்தி வரப்போகிறாள் என்றதும் கந்தசாமிக்கு வயது குறைந்தது போல் ஆகிவிட்டது.
கட்டிலில் அமர்ந்திருந்தவர் தன்னையறியாமல் எழுந்து நிற்க முயற்சி செய்துவிட்டார். வலியில் துடித்துப்போய்விட்டார்.
அந்த நேரம் அங்கு வந்த ராமச்சந்திரன் தந்தையைத் தாங்கிப் பிடித்துவிட்டார்.
"என்னப்பா இது? சின்னப்பிள்ளையாட்டம்?"
"ஆமாப்பா. எனக்கு வயசு குறைஞ்சுதான் போச்சு. லட்சுமிம்மா வரப்போறாங்கள்ல."
"அதனால் உங்களுக்கு அடிபட்டதையும் மறந்துட்டீங்களேப்பா."
"சந்தோசத்துல என்னை மறந்து எழுந்துட்டேன்." என்றவரின் முகத்தில் வலி தெரிந்தது.
"என்னப்பா ரொம்ப வலிக்குதாப்பா?"
"இப்ப பரவாயில்லைப்பா. அதுதான் மாப்பிள்ளை தம்பி நல்லா பார்த்துக்கிறாரே."
"ஆமாப்பா. மாப்பிள்ளை நல்ல குணமா தெரியறார். எத்தனை அனுசரணையா நடந்துக்கிறார். அது