அவளுக்குப் புரிந்தது. கடைசியில் அவள் பயந்தது மாதிரியே நடந்துவிட்டதே. மகள் வெட்கத்தில் பேச்சு வராமல் நிற்கிறாள் என்று ராமச்சந்திரன் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். வளர்மதி மகளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்துகொண்டாள்.
"என்னடி அப்படி திகைச்சுப் போய் நிற்கிறே?" அதட்டலான குரலில் கேட்டாள்.
"அம்மா. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்மா."
"என்னடி சொல்றே? கழுதையா இருந்தாலும் கழுத்தை நீட்டறேன்னு சொன்னே. இப்ப என்ன மாத்திப் பேசறே?" அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே மகளை அதட்டினாள்.
கிட்டத்தட்ட நிச்சயமான கல்யாணம். மகள் இப்படி அச்சாணியமாக பேசுவதை அவள் விரும்பவில்லை.
"ஆமாம்மா. நான் அப்படித்தான் சொன்னேன். இப்பவும் அதையேதான் சொல்றேன். ஒரு கழுதையா இருந்தாலும் கழுத்தை நீட்டறேன். ஆனால் அவன் மட்டும் வேண்டாம்மா." அவள் மறுத்துப் பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அரவம் தெரிந்து திரும்பிப் பார்த்தாள் வளர்மதி.
ஒருகணம் திக்கென்று அதிர்ந்தவள் அடுத்த கணமே சமாளித்துக்கொண்டு "வாங்க மாப்பிள்ளை." என்றாள்.
வளரும்............