நின்றிருக்கிறாள்.
மற்றவர்களோடு சுகன்யாவும் இங்கேயே வந்துவிட்டாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வளர்மதியிடம் வந்தாள்.
"அம்மா. உங்க பொண்ணை பத்திரமா உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். நான் வீட்டுக்குப்போகவாம்மா?"
தன்னிடம் பதிலை எதிர்பார்த்திருந்த சுகன்யாவை அன்புடன் அணைத்துக்கொண்டாள் வளர்மதி.
தான் சொன்ன வார்த்தைக்காக அவளும் ஊருக்கு வராமல் மகாலட்சுமியுடனே இருந்திருக்கிறாள்.
"போயிட்டு வா சுகன்யா."
மற்றவர்களிடம் விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினாள்.
அவர்கள் எத்தனை பாசமாக இருந்தாலும் சுகன்யா அளவுக்கு மீறி உரிமையை எடுத்துக்கொள்வதில்லை. தன்னுடைய இடம் என்ன என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
சுகன்யாவின் கலகலப்பான சுபாவத்தால் அவளை அங்குள்ள அனைவருக்குமே பிடிக்கும்.
"தாத்தா எங்கே?"
"மாமா அவரோட அறையில் இருக்காங்க."
அவர் ஏன் இன்னும் தன்னைப் பார்க்க வரவில்லை. ஆவலுடன் அவரது அறைக்கு ஓடினாள்.
கந்தசாமி கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு கலங்கினாள். அவர் இந்த மாதிரி சோர்ந்து படுத்துப் பார்த்ததேயில்லை. அத்துடன் அவர் மிகவும் இளைத்துப் போயிருந்தார்.
"தாத்தா." என்றவள் ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டாள்.
"என்னாச்சு தாத்தா? ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டீங்க?"
"ஒன்னுமில்லம்மா. நீங்க வந்துட்டீங்கள்ல. இனி எல்லாம் சரியாயிடும். நீங்க என்னம்மா இப்படி இளைச்சுப் போயிட்டீங்க?" கவலையுடன் பேத்தியை நோக்கினார்.
இங்கிருந்து சென்னைக்குச் செல்லும்போது அவள் சற்று பூசினாற் போன்றிருந்தாள். அவள் கொஞ்சம் மெலிந்தாலும் கந்தசாமியால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர் செய்யும் ஆர்ப்பாட்டைத்தையும் வீட்டினரால் தாங்கிக் கொள்ள முடியாது.
யாரும் பேத்தியை சரியாக கவனிக்கவில்லை என்று ஒரு ஆட்டம் ஆடிவிடுவார். அவர் வருந்துகிறார் என்றே தோழிகள் கிண்டல் செய்தாலும் மகாலட்சுமி தன் உடலை மெலிய விடமாட்டாள். இப்போது சென்னைக்குச் சென்றபிறகு தான் உடற்பயிற்சி செய்து உடம்பை கச்சிதமாக குறைத்தாள். இப்போது ஊருக்கு செல்லப்போகிறோம் என்று அவள் மீண்டும் தன் உடல் எடையை கூட்ட முயற்சி செய்ததில் சிறிதளவே அவளுக்கு வெற்றி கிடைத்தது.
தன் உடல் பருமனாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் வீட்டினர் வருத்தப்படுகிறார்களே என்றுதான் அவள் உடல் பருமனை கண்டுகொள்ளாமல் விட்டாள்.