நேரங்களில் கேட்க முயன்று வளர்மதியிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்.
அவனுக்கு தன்னுடைய சின்ன சந்தோசம் கூட பிடிக்கவில்லை என்று அவளுக்கு நிச்சயமாகப் புரிந்தது.
அன்றைய தினம் அவள் ஏன் அழுதாள்? என்று கூட வீட்டினர் யாரும் கேட்கவில்லை. அது ஏன் என்று இன்னமும் அவளுக்குப் புரியவில்லை.
அடுத்ததாக கல்லூரியில் அவள் உடன் பயிலும் வீணா என்ற மாணவிக்கும் அவளைப் பிடிக்கவில்லை. அதுவும் ஏனென்று புரியவில்லை.
"அவளுக்கு உன்னைக் கண்டு பொறாமை லட்சுமி. அதனால் தான் அப்படி பொறுமுகிறாள்" என்று அவளை சமாதானப்படுத்துவாள் சுகன்யா.
முதலில் சாந்தாம்மா வீணாவின் வீட்டில்தான் வேலை பார்த்திருக்கிறாள். ஒரு முறை கல்லூரிக்கே வந்து சாந்தாம்மா வீணாவின் காலில் விழாத குறையாக கெஞ்சினாள். அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் வீணா.
அந்த நேரத்தில் அங்கு வந்த மகாலட்சுமி அவளைத் தூக்கிவிட்டாள். கண்ணீருடன் சாந்தாம்மா நின்ற கோலம் அவள் மனதைக் கரைத்தது.
சாந்தாம்மாவின் மகள் வீணாவை ஏதோ கூறிவிட்டாள் என்று வேலையைவிட்டு நிறுத்திவிட்டாளாம். அதனால் அவளை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்டு வேலையில் மீண்டும் சேர்வதற்காக தான் சாந்தாம்மா அங்கு வந்ததே. ஆனால் அவளை வீணா அவமானப்படுத்திவிட்டாள்.
அந்த நேரத்தில் தான் அவர்களுக்கும் சமையல் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. அதனால் சாந்தாம்மாவை தங்கள் வீட்டிலேயே சமையல் வேலைக்கு சேர்த்துக்கொண்டாள். அதனால் மகாலட்சுமியின் மீது வீணாவுக்கு அதிக கோபம்.
கண்டதையும் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு வழியாக உறக்கம் வர தன்னையறியாமல் உறங்கினாள்.
"நம்ம நாடு வருங்கால சிறந்த விஞ்ஞானியை இழந்துடுச்சு."
மிகவும் வருத்தமாக கூறினாள் சுகன்யா. அவள் முகத்தைப் பார்த்ததும் எதுவும் கேட்காமல் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று மகாலட்சுமி வேடிக்கைப் பார்த்தாள்.
"அப்படி யார் அந்த விஞ்ஞானி?" தோழி ஒருத்தி ஆர்வமுடன் கேட்டாள்.
"அந்த வேதனையை ஏன் இப்ப கிளப்பறே?" சோகமாய் கூறினாள் சுகன்யா.
"ஏன்டி நானா உன்னைக் கிளப்பினேன்? நீதானேடி சொன்னே."
"சரி சரி அந்த வேதனையை சொல்லித் தொலையறேன்" என்று சலித்துக் கொண்டாள்.
"சீக்கிரம் தான் சொல்லேன்." ஆர்வமுடன் கேட்டாள் தோழி.