“என்ன மகா? நான்தான் நீ டயர்டா இருக்கேன்னுதானே உன்னை தூங்கும்மான்னு சொல்லிட்டு வந்தேன். அதற்குள் குளிச்சிட்டு வந்துட்டியா?”
அவன் தன்னிடம்தான் பேசுகிறானா? அவளுக்கு வியப்பு. அவன் அவளை நோக்கித்தான் சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான்.
அவன் மட்டுமா? வீட்டில் உள்ளவர்களும் அவளை குறுகுறுவென்று பார்க்க அதன் பிறகுதான் அவன் பேசிய தொனியில் அவளுக்கு இப்படியா பேசி வைப்பான்? வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று நினைக்கும்போதே அவளுக்கு முகம் சிவந்தது.
அவள் வெட்கப்படுவதைக் கண்டு மற்றவர்கள் முகத்தில் மலர்ச்சி. அதற்காகத்தான் அவன் அப்படி பேசினானா?
“இப்படித்தான் குளிச்சுட்டு ஈரம் சொட்ட சொட்ட வந்து நிற்பியா? சின்னப்பிள்ளையா நீ?” வளர்மதி மகளைக் கடிந்துகொண்டே அவள் தலையைத் துவட்டத் தொடங்கினாள்.
‘அய்யய்யோ. அவன் ஏற்கனவே என்னை சின்னப்பிள்ளை போல் தான் நடத்துகிறான். பத்தாததற்கு இந்த அம்மா வேறு அவனுக்கு நேராகவே என்னை இப்படி நடத்தினால் அவன் என்ன நினைத்துக்கொள்வான்?’
“அம்மா. நானே துவட்டிக்கொள்கிறேன்மா.” என்று தாயின் கையில் இருந்த துண்டை வாங்கினாள்.
“லட்சுமி. இன்னும் பொறுப்பு இல்லாமல் இருக்கக்கூடாது. இப்படியா மாப்பிள்ளையை விட்டுட்டு தூங்குவே. அவருக்கு இது புது இடம். அவர் சீக்கிரம் எழுந்து வந்துட்டார். நீ எத்தனை நேரம் கழிச்சு எழுந்து வர்றே? இனி நீ சின்னப் பெண் அல்ல. நேரத்துக்கு எழுந்திரிக்கனும். மாப்பிள்ளையைக் கவனிச்சுக்கனும்.”
அவனுக்கு நேராகவே இதை எல்லாம் பேச வேண்டுமா?
“அத்தை. எதற்கும் கவலைப்படாதீங்க. நான் அவளை நல்லாக் கவனிச்சுக்கிறேன்.”
அவளைப் பார்த்துக்கொண்டே கூறினான்.
அவனது பார்வையில் அவள் சில்லிட்டுப்போனாள். அவன் எந்த அர்த்தத்தில் நல்லாக் கவனிச்சுக்கிறேன் என்று சொல்கிறான்.
ஆனால் அவளது வீட்டினருக்கு அதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை போலும்.
மருமகன் தங்கள் மகளை நன்றாக கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது போலும்.
“இந்தா. குடி.” என்று அவள் கையில் காபி தம்ளரை திணித்தாள் வளர்மதி.
அப்போது மாதவன் எழுந்தான்.
“என்னாச்சு மாப்பிள்ளை?”