“வாக்கிங் போய்விட்டு வந்தேன்ல மாமா. அதான் போய் குளிச்சிட்டு வர்றேன்.” என்றவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
“போ. போ. மாப்பிள்ளை குளிக்கப் போறாராம். போய் அவருக்குத் தேவையானதை எடுத்துக்கொடு.”
வளர்மதி மகளைத் தள்ளினாள்.
மகள் காபியைக் குடித்தாளா? இல்லையா? என்று கூட பார்க்காமல் பேசும் தாயின் மீது கோபம் வந்தது.
இத்தனை நாட்களும் அவனை நான்தான் கவனித்தேனா? அவனேதானே அவனைப் பார்த்துக்கொண்டான். இப்போது மட்டும் என்ன? என்னவோ பார்வையிலேயே கட்டளையிட்டுச் செல்கிறானே? அத்துடன் இந்த அம்மாவும் அவனுக்கு ஒத்தூதுவது போல் பேசுறாங்களே. அவளுக்கு கோபமாக வந்தது.
ஆனாலும் காதில் அவனது மாமா ராஜசேகரின் குரல் விழுந்தது. அவன் சுயம்புவாக தன்னை உருவாக்கிக்கொண்டவன். எதையும் வாய்விட்டு கேட்க மாட்டான். நாமாகவே அவனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதையும் விட அவன் இளவயதிலேயே பெற்றோரை இழந்தவன். அவர்களின் அரவணைப்பை உணராதவன்.
ராஜசேகரும் அவனை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு அவர் மனைவியும் விடவில்லை.
அவளும் அவரது மனைவி கஸ்தூரியை திருமணத்தின் போது பார்த்திருக்கிறாள். அவர்கள் தான் மாதவனின் பெற்றோர் இடத்தில் இருந்து அவர்கள் திருமணத்தை நடத்தினர்.
தாயின் வற்புறுத்தலால் தனது அறைக்குச் சென்றாலும் அவளுக்கு மாதவனின் நிலையைக் கண்டு வருத்தம் தோன்றியதுதான். பாசமே அறியாமல் வளர்ந்தவன். அதனால்தான் தன்னிடம் இப்படி நடந்துகொள்கிறான் போலும்.
அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அதற்குள் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றிருந்தான்.
வெளியில் என்னவோ சைகை காட்டிவிட்டு வந்தான். இப்போது என்ன?
அவன் குளித்துவிட்டு வந்த பிறகும் அவளைக் கண்டு கொள்ளவில்லை.
வெளியில் என்னவோ காதல் கணவன் மாதிரி நடந்துகொண்டான். இப்போது கண்டு கொள்ளாமல் நிற்கிறான். குளித்துவிட்டு வந்தவன் உடைமாற்றிக் கொண்டு பால்கனிக்குச் சென்று தனது அலைபேசியை எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்தான்.
இவனை நான் கண்டுகொள்ளாமல் இருக்கிற மாதிரி அம்மா என்ன பேசினாங்க. இப்ப பார்த்தால்