இவன் வீட்டிற்கு நான் வந்த மாதிரி இவன் என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். இதற்காகத்தான் நான் இவன் பின்னாடியே வந்தேனா?
அங்கே என்னவோ காதல் கணவன் மாதிரி பேசினான். இப்போது ஏன் இப்படி நடந்துகொள்கிறான்.
“லட்சுமி. மாப்பிள்ளையைக் கூப்பிட்டுக்கிட்டு சாப்பிட வாம்மா.”
தாயின் குரல் கேட்டு எரிச்சலடைந்தாள்.
ஏன் அவன் சாப்பிட வரமாட்டானாமா?
நான்தான் இவன் கையைப்பிடித்துக்கொண்டு அழைத்துப்போக வேண்டுமா? அம்மா கூப்பிட்டது அவன் காதிலும் விழுந்திருக்கும்தானே?
ஆனால் தனியே போனால் அன்னையிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.
விட்டால் அன்னை தன்னை பட்டினியே போடவும் வாய்ப்பிருக்கிறது.
அவனைத்தான் கூப்பிட வேண்டுமா? யோசனையிலேயே நின்றாள். பிறகு ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ளலாம் என்று அறையைவிட்டு வெளியே வந்தாள்.
தன் தோளில் கை விழவும் திடுக்கிட்டாள். அவன்தான். அவள் பின்னேயே வந்திருக்கிறான். முதன் அவள் தோள் மீது கைபோட்டவாறு அருகிலேயே அணைத்தவாறு நடந்தவனை திடுக்கிட்டுப் பார்த்தாள். ஆனால் அவர்கள் அன்யோன்யம் பார்த்து வீட்டினர் மகிழ்ந்துபோனார்கள்.
ஏன் இப்படி நடிக்கிறான் என்று புரியாமல் திகைத்தாள். இப்படியே காலம் பூரா நடிப்பானோ? ஏன் அவன் தங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்? இது புரியாமல் அவளுக்குத் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.
அவர்களை அருகருகே அமர வைத்தனர். அவன் அருகில் அமர்ந்துகொண்டே அவள்தான் அந்த வீட்டிற்குப் புதிது போல் அவன் அவளுக்கு உபசரிக்க ஆரம்பித்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டாள்.
வீட்டினர் முன்பு அவன் நடிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அசடு வழிந்தாள்.
எப்போதடா அவன் வீட்டிற்குச் செல்வோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அங்கே அவன் நிச்சயம் நடிக்க மாட்டான். அவனது உண்மையான சொரூபத்தை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி நடிப்பை சகித்துக்கொண்டிருக்க நேராதல்லவா?
நல்லவேளையக அன்றே அவர்கள் அவன் வீட்டிற்குச் செல்லப்போகிறார்கள். மதிய விருந்து முடிந்து மாலையில் அவன் வீட்டிற்குச் செல்லப் போகிறார்கள். அதுவரைக்கும் அவள் நடிக்க வேண்டியதுதான்.
காலை உணவு முடிந்து அவள் தனதறைக்குச் செல்லாமல் சமையல் அறையிலேயே பின்னிப் பின்னி நின்று கொண்டிருந்தாள்.