அவனே அவளை பார்த்து கொண்டான். அவளுக்கு காய்ச்சல் வந்தபோது அசோக் தினமும் வந்து அவளை பரிசோதித்து செல்லுவான். ஆனாலும் ராம் அவளை பேச்சினால் சீண்டவில்லை. குத்தி காட்டும் படி பேசவும் இல்லை. அவளுக்கு காய்ச்சல் வந்த அன்று கீழே விசாலம் பாட்டி ராமை திட்டியது அவளுக்கும் கேட்டது. அதனால் தான் அவன் அப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்திருந்தாலும் அவன் அவளிடம் பரிவுடன் நடந்தது மனதில் இனிக்க தான் செய்தது.
அவன் அவள் மனம் மகிழும் படி இத்தனை நாட்களில் ஒருமுறை பேசியதோய் பார்த்ததோ கிடையாது. இதையெல்லாம் எதிர்பார்த்தோன்றும் நான் திருமணம் செய்யவில்லை என அவளே அவளை சமாதானப்படுத்தி கொண்டாலும் இயல்பான அந்த பெண்மனம் ஒரு ஓரத்தில் அதற்காக ஏங்கி கொண்டு தான் இருந்தது. அவனை கண்டு இளக தொடங்கிய மனதை அடக்கும்படி இருந்தது அன்று நித்யா நடந்து கொண்டது.
அன்று மதிய நேரம் உணவு வேலை முடிந்து எடுக்க வேண்டிய மருந்தை எடுத்ததும் தமிழுக்கு அந்த மருந்தின் இயல்பால் கண்களை சொருகியது. அதற்க்கு முந்தைய தினம் இரவு ராம் அவளை அந்த கட்டிலில் படுக்க சொல்லியிருந்தாலும் இத்தனை நாள் பழக்க தோஷத்தினாலோ என்னவோ அவள் கால்கள் அவளையும் அறியாமல் சோபாவை நோக்கி சென்றது. கண்களை மூடி சோபாவில் சாய்ந்தவளை எழுப்பியது காலடி சத்தம். மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் முன்பு நின்றிருந்தாள் நித்யா.
"என்ன நித்யா???" அவளை அங்கு எதிர்பார்க்காத தமிழ்செல்வி கேட்கவும், "இல்லை காலைல காலேஜ்க்கு ராம் கூட போகும்போது உனக்கு பிவேர்னு சொன்னாரு. அதான் என்னனு பார்க்கலாம்னு வந்தேன்" என்றவள் வார்த்தைகளுக்கும் கண்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல அவள் கண்கள் அந்த அறையை துளைத்து கொண்டிருந்தது.
அவள் தன்னை அக்கறையாக விசாரிக்கவில்லை என்று நன்றாகவே உணர முடிந்தது தமிழ்செல்விக்கு.
"ஆமா நீ ஏன் சோபால படுத்திருக்க?" அறையை சுற்றி நடந்தபடி நித்யா கேட்க, "சும்மா தான் உக்காந்திருந்தேன் அப்படியே தூக்கம் வந்துடுச்சு" தமிழ்செல்வி சொல்லவும் "ஓஹ்ஹோ நான் கூட நீ எப்பவும் இங்க தான் தூங்கற போலனு நெனைச்சேன்" என்ற நித்யாவின் பேச்சில் தமிழ்செல்விக்கு கோவம் வந்தது.
"நித்யா இப்படி பேசறது மேனர்ஸ் இல்லைனு நெனைக்கிறேன்" தமிழ்செல்வி குரல் காய்ச்சலால் பலவீனமாக ஒலித்தாலும் அவளின் கோவம் அதில் தெளிவாகவே தெரிந்தது நித்யாவுக்கு. தமிழை பார்த்து புன்னகைத்தவள் "இட்ஸ் ஜஸ்ட் எ ஜோக்" என தோளை குலுக்கி சிரிக்க, கைவிரல்களை மடக்கி தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள் தமிழ்செல்வி.