காலையில் கிளம்பிச் சென்றால் இரவுதான் வருவான். இடையில் அவளை அழைத்துப் பேசுவதும் இல்லை.
அவளும் காலையில் சமைத்தாள் என்றால் இரவுதான் வேலை.
வீட்டில் அதிகமான பொருட்களும் இல்லை. அதனால் சுத்தம் செய்வது எளிதாக இருந்தது. அவன் ஏற்கனவே வீட்டை தூய்மையாகத்தான் பேணி வந்திருக்கிறான் எனும் போது அவளுக்கு வேலை அதிகமாக இல்லை.
முதல் மாடியில் வீடு என்பதால் வீட்டிற்கு வெளியில் கூட்டி சுத்தம் செய்வது, கோலம் போடுவது என்று எந்த வேலையும் இல்லை.
ஓரளவிற்கு அவளுக்கு அந்த காலனி வாழ்க்கை புரிபட ஆரம்பித்தது.
அந்தக் காலனியில் மொத்தம் பதினெட்டு வீடுகள் இருந்தன.
மூன்று தளங்களைக் கொண்ட அந்த காலனி வீட்டில் ஒவ்வொரு தளத்திலும் தலா ஆறு வீடுகள் இருந்தன.
நடுவில் மாடிக்குச் செல்லும் மாடிப்படி இருந்தது. மாடிப்படிக்கு பக்கவாட்டில் மூன்று மூன்று வீடுகளாக இருந்தன.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு அவள் இன்னும் பழகவில்லை. ஒருசில பேர் தாங்களாக வருவார்கள். தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.
ஆனாலும் முழுமையாக யாரைப் பற்றியும் தெரியவில்லை.
அவளுக்கு முக்கிய உறவான அவளுடைய கணவனைப் பற்றியே அறிந்துகொள்ள முடியாதபோது அவள் மற்றவர்களைப் பற்றி என்ன அறிய முடியும்?
மாதவன் அவள் சமைத்ததை குறை கூறாமல் சாப்பிட்டதேயில்லை.
திருமணத்திற்கு முன்பு அவன்தான் சமைத்துச் சாப்பிட்டானாம். இந்த ஒரு வார காலத்திற்குள்ளேயே சமையல் தெரிந்தவன் கணவனாக வாய்த்தால் அந்தப் பெண் பாவம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் மகாலட்சுமி. இதுவே திருமணத்திற்கு முன்பு தோழிகள் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும்போது சமையல் தெரிந்த மாப்பிள்ளை வாய்த்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவன் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவான் என்று பேசியதுண்டுதான்.
ஆனால் இப்போது அவள் எப்படி சமைத்தாலும் அதில் குறை கூறும்போது அவனுக்கு ஏன் சமைக்கத் தெரிந்தது என்று அவளுக்கு இப்போது தோன்றுகிறது.
அவன் சென்ற பிறகு வீட்டில் வேலை எதுவும் செய்வதற்கு இல்லாமல் போனது. அவளுக்கு பொழுதுபோக்கிற்கு வழியே இல்லாமலும் போனது.
அவளுக்குப் புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அவன் புத்தகங்கள் வாசிக்கக்கூடாது