அவன் பாட்டிற்கு கேட்டுவிட்டு சாதாரணமாக இருந்தான். அவளால்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவள் குடும்பத்தினர் அடுத்தவர் வயிறு வாடுவதைப் பொறுக்காமல் தங்களால் இயன்ற உதவி செய்பவர்கள். அவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான். அதுவும் சாப்பாட்டில் விசம் வைத்துக்கொள்ளுமளவிற்கா அவளைப் பற்றி அவன் மட்டமாக எண்ணியிருக்கிறான். கண்களில் கண்ணீர் வழிய அவனோடு உணவருந்த வந்து அமர்ந்தாள். அவன் அவள் கண்ணீரைக் கண்டுகொள்ளவேயில்லை. என்னவோ தான் சொன்னது சரிதான் என்றும், அதை மறைப்பதற்காகவே அவள் அவனோடு உணவருந்த வந்த மாதிரியும் அவன் நடந்துகொண்டான்.
அவன் தன்னைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டானா? என்ற ஏக்கம் அவள் மனதை வியாபித்தது.
இப்போது எதற்கு வம்பு என்று அவனுடன் சாப்பிட அமர்ந்தாள். உணவுண்டவுடன் அவன் ஓய்விற்காக படுத்துவிட்டான். அவள் ஏற்கனவே உறங்கியிருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல், அறைக்குள் இருந்தால் தூங்கும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று வெளியில் வந்தாள். தங்கள் வீட்டை விட்டு வெளியில் எட்டிப்பார்த்தாள். அந்தக் காலனியே அமைதியாக இருந்தது. எதிர்த்தாற்போலிருந்த சாலையில் வாகனங்கள் விரைந்த வண்ணம் இருந்தன.
அவளுக்கு தான் இங்கே வந்ததில் இருந்து நடந்தது எல்லாம நினைத்து மலைப்பாக இருந்தது. திருமணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவள் களைத்துப்போய்விட்டாள்.
கணவன் என்ற உரிமையில் அவளுக்கு அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று கட்டளையிட்டவன் இன்றுவரை கணவன் என்ற உரிமையில் அவளிடம் நெருங்கவே இல்லை. அது அவளுக்கு ஒருபக்கம் நெருடலாக இருந்தாலும், மறுபக்கம் நிம்மதியாகவும் இருந்தது.
“என்ன போரடிக்குதா?”
ஒரு பெண்ணின் குரலில் திரும்பிப் பார்த்தாள் மகாலட்சுமி.
பக்கத்து வீட்டின் வாசலில் நின்றிருந்தாள். இவளைப் பார்த்து புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். இன்னும் இந்த காலனியில் உள்ளவர்கள் அவளுக்குப் பழக்கமாகவில்லை. காலையில் மட்டும் வீட்டில் உள்ள குப்பையைக் கொட்டிவிட்டு, தண்ணீர் எடுத்து வருவதற்காக கீழே இறங்கிச் செல்வாள். அவள் செல்லும் நேரத்தில் யாராவது நின்று கொண்டிருந்தால் ஒரு புன்னகையை சிந்திவிட்டு பேசாமல் வந்துவிடுவாள். யாரிடமும் பேச முயலவில்லை.
இந்தப் பெண் தானாகவே சிநேக பாவத்துடன் பேசவும், அவளுக்கும் இனி இவர்கள்தான் தன் உறவினர்கள் போல என்று தோன்றியது.