“ஆமாம்.” என்றாள் புன்னகையுடன்.
“நான் ரஞ்சனி.” என்று அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“நான்.”
“நீங்க உங்களை அறிமுகப்படுத்திக்கவே வேண்டாமே.” என்று சிரித்தாள்.
“வாங்களேன்.” என்று தன் வீட்டிற்கு அழைத்தாள் ரஞ்சனி.
“இல்லை அவங்க தூங்கறாங்க.” என்று யோசனையுடன் தன் வீட்டை நோக்கினாள். பிறகு என்ன யோசித்தாளோ கதவை சாத்திவிட்டு அவள் வீட்டிற்கு வந்தாள்.
ரஞ்சனி கணவன் வீட்டில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தான். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு ஆண், ஒரு பெண். பெண் மூத்தவள். மாமனார், மாமியார் எல்லாம் கிராமத்தில் இருக்கிறார்களாம். அவ்வப்போது வந்து செல்வார்களாம்.
பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். பையனுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறதாம். இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் ஆழ்ந்துபோனான். அவளும் அவனருகில் அமர்ந்தாள். அவள் புதியவள் என்று ஒதுங்காமல் சலுகையோடு அவளருகில் வந்து ஒட்டி அமர்ந்தான் அந்த சிறுவன். அவளுக்குத் தன் அண்ணன் குழந்தைகளை நினைவூட்டினான்.
அவள் கண்கள் கலங்கிற்று.
“இந்தாங்க.” என்று ஒரு தம்ளரை நீட்டினாள்.
குளிர்ச்சியாக இருந்த அந்த பழச்சாறு தொண்டைக்கு இதமாக இருந்தது.
“என்ன வீட்டு ஞாபகமா?”
“ஆமா. குட்டிப்பையனைப் பார்த்ததும் எனக்கு என் அண்ணன் குழந்தைகள் ஞாபகம் வந்துட்டாங்க.”
“வீட்டுக்குப் போய்ட்டு வர வேண்டியதுதானே?”
“போகனும்.” என்றாள். மனதிற்குள் அவனிடம் சொல்லி வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
ரஞ்சனி இனிமையாகப் பேசினாள். யாரைப் பற்றியும் யாரும் குறை கூறவில்லை. அவர்களுடைய குடும்பத்தைப் பற்றியும் பேசவில்லை. இருவருமே தங்கள் கல்லூரிக் காலத்திற்குச் சென்றிருந்தார்கள். ரஞ்சனிக்கும் கதைகள் படிப்பதில் ஆர்வம். அவளிடம் இருந்த மாத நாவல் ஒன்றை வாங்கிக் கொண்டாள்.
தான் ஹோட்டலுக்குச் சென்ற பிறகு தனக்குத் தேவையானதை தானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். படிப்பது நல்ல பழக்கம் என்பார்கள். இவன் என்ன என்றால் அவளை முறைக்கிறான்.