தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்
இந்த கதை முழுவதும் கற்பனையே...
ஆப்ரேஷன் அறையை விட்டு வெளியே வந்த சத்யாவை சூழ்ந்துகொண்டனர் மக்கள். காப்பாற்றி விட்டோம் என்று சத்யா கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
டாக்டர் சத்யாவின் காலிலே விழுந்து விட்டாள் அந்த பெண். பரவால்ல.. இருக்கட்டும் இதெல்லாம் என் கடமை என்று மிகவும் பொறுமையாக எந்த ஆணவமும் தலைக்கனமும் இல்லாமல் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் டாக்டர் சத்யா.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் போல...டாக்டர் சத்யாவிற்கு இருக்கும் இன்னொரு முகம் இந்த உலகத்திற்கு தெரிய வரும்பொழுது இன்று காலையிலிருந்து கொண்டாடி கொண்டு இருக்கும் இதே மக்கள் கூட்டம் என்ன செய்யும் என்பதை யாருமே யோசிக்க முடியாது.
பொழுது விடிந்தது...
மணி மூன்றரை என்று காட்டியது. அந்த அறை கடிகாரத்தின் நொடி முள்ளின் சத்தத்தோடு இதயம் துடிக்கும் சத்தம் கூட தெளிவாக கேட்கும் வகையில் அமைதியாக இருந்தது. தூக்கத்திலிருந்து புரண்டு படுத்தாள் மல்லிகா.
திடீரென்று விழிப்பு வர மெதுவாக கண் விழித்தாள் மல்லிகா. அவளது மனம் ஏனோ திக் திக்கென்று அடித்துக் கொள்ள சற்று பயத்துடனே திரும்பிப் படுத்தவள் அலறியபடியே பயத்தில் தடுமாறி கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.
யா யா யா யா யார் நீ...
நானா... நான் ஒரு விறகுவெட்டி. உன்னை இப்ப என்ன செய்யப் போறேன் பாரு என்று அவன் கையிலிருந்த கோடாரியை உயர்த்தி காட்டினான்.
பயத்தில் ஏசி அறையின் குளிரையும் தாண்டி வியர்த்துக் கொட்டியது மல்லிகாவுக்கு.
யார் நீ... என்னை எதுக்கு கொள்ள போறே. நான் எந்த தப்பும் செய்யல... என்னை என்னை விட்டுவிடு என்று அலறியபடியே பின்னாக நகர்ந்தாள் மல்லிகா.
உன்னை கொன்றுவிடலாமா என்று நாராசமாக சிரித்தான் அவன்.
அவள் மனம் அந்த சிரிப்பு சத்தத்தை எங்கேயோ கேட்டதாக அவளுக்கு உணர்த்த அவள் சற்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ஏய் என்னடி யோசனை.. ஒரே போடா போடவா என்று அவன் மீண்டும் குரல் உயர்த்தி கேட்க பயத்தில் தயவுசெஞ்சு என்ன விட்டுடு... எனக்கு ஒன்னும் தெரியாது என்ன விட்டுவிடு என்ன விட்டுவிடு என்று அலறி அவள் மயங்கி சரிந்தாள்.