அதற்கு காரணமாக அவன் ஜாதகம்தான் இவளதோடு பொருந்தி வருவது என்று சொன்னார்கள்.
ஆனால் இவனோடு பேசிய அந்த ஜோதிடர், தன்னுடைய ஜாதகத்திற்குப் பொருத்தமாக அவனதை எழுதிக்கொடுத்ததாக கூறுகிறார். அவனும் அதை மறுக்காமல் கிண்டலாக சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.
அப்போது அவன்தான் அவளைத் திருமணம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு அவன் ஜாதகத்தை மாற்றி எழுதியிருக்கிறான்? அதன் பிறகும் எதற்காக வேண்டாவெறுப்பாக திருமணம் செய்துகொண்டது போல் நடந்துகொள்ள வேண்டும்.
அந்த ஆள் என்ன சொன்னான்? என்று யோசித்துப் பார்த்தாள்.
அவர்கள் இருவரும் காதல் செய்வதாகவும், அதனாலேயே அவன் ஜாதகத்தை மாற்றி எழுதித்தந்ததாகவும் கூறினான். அத்துடனா? அவர்கள் இருவருக்கும் இயல்பிலேயே ஜாதகம் நன்றாகப் பொருந்தி வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றானே.
தன்னைப் பிடிக்காத போது எதற்காக அவன் தன்னுடைய ஜாதகத்திற்குப் பொருத்தமாக அவன் ஜாதகத்தை எழுதச் சொல்ல வேண்டும்?
இதுதான் அன்று முழுவதும் அவள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. அவள் அன்றைய வேலையிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை.
சுகன்யா அவளை ஜாடை மாடையாக கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
மகள் அன்று வேலைக்கு வந்திருக்கிறாள் என்றதும் வளர்மதி அவளுக்கு அழைத்தாள். அவள் எடுக்கவில்லை என்றதும் என்னவோ ஏதோவென்று பதட்டத்துடன் சுகன்யாவிற்கு அழைத்தாள்.
“ஹலோ. சொல்லுங்கம்மா.”
“என்ன இன்னிக்கு லட்சுமி வேலைக்கு வந்திருக்காளா?”
“ஆமாம்மா.”
“நல்லாருக்காளா? ஏன் போனையே எடுக்க மாட்டேங்கிறா?”
“உங்க பொண்ணுக்கு மனசு இங்கே இருந்தால்தானேம்மா எடுக்க முடியும்?”
“என்ன சொல்றே? உடம்பு முடியலையா?”
“அதெல்லாம் இல்லைம்மமா. வந்ததில் இருந்து மந்திரிச்சு விட்ட மாதிரியே அண்ணனோட நினைப்பில் இருந்தால் மத்தவங்களை எப்படி நினைச்சுப் பார்க்க முடியும்?”
அவள் சொன்னது புரிய மறுமுனையில் வளர்மதியின் மனம் மகிழ்ந்தது.
“அப்ப அவ சந்தோசமாத்தானே இருக்கா?”
“ஆமாம்மா. இப்பக்கூட அண்ணன் எப்ப வருவாங்கன்னு பார்த்துக்கிட்டு தான் இருக்காப்பல.”
“இப்பத்தான் என் மனசே குளிர்ந்துச்சு.”