தானே குழந்தைகளுக்கும் தனக்குமாக சாப்பாட்டை எடுத்துட்டு வந்துவிட்டாள்.
குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தாள். மணி ஒன்பதரை. இது வரைக்குமா குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்தாள். அவள் செயல் மகாலட்சுமிக்கு எரிச்சலைத் தந்தது.
தன்னுடைய வீட்டில் அவள் உரிமை பாராட்டுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. சாப்பாடு வேணும் என்று கேட்டிருந்தால் கூட ஒன்றும் தெரியாது. அவள் உரிமையுள்ளவள் போன்று எடுத்து வந்து சாப்பிடுகிறாள். சாப்பிட்டுவிட்டுப்போகட்டும். சிறிது நேரம் முன்பு வந்து அவள் கேட்டிருந்தால் என்றால் அவர்களுக்கும் சேர்த்து சமைத்திருப்பாள். அவனோ சாப்பாட்டை வீணாக்குவது பிடிக்காது என்று சொல்கிறான் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறாள்.
இப்படி எல்லாம் அவள் கணக்கு பார்த்து சமைத்ததில்லை. இப்போது கணவனின் சம்பாத்தியத்தில் அவன் சொல்கிற படிதான் நடக்க வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாலும் இந்த செல்வி இப்படி செய்கிறாளே என்றிருந்தது.
“நீங்க எங்கே வேலை பார்க்கறீங்க?” என்றாள் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக.
“நான் இதுங்களோட போராடவே நேரம் சரியா இருக்கு. இதில் எங்கே வேலைக்குப் போறது?” என்றாள் எரிச்சலான குரலில்.
வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். இந்நேரம் வரைக்கும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்காமல் இவள் எல்லாம் என்ன ஒரு பெண்.
குழந்தைகள் இருவரும் ஆவலுடன் சாப்பிடுவதைக் கண்டால் அவர்கள் பசியோடு இருந்திருப்பார்கள் என்று தெரிந்தது.
“இந்த அத்தான் இன்னுமா டிவி வாங்காம இருக்கார்? ஏன் உங்கம்மா வீட்டில் உனக்கு ஒன்னும் செய்யலை? நீ கேட்க வேண்டியதுதானே? எங்கத்தான் நல்லா ஏமாந்துட்டார்.” என்றாள்.
“சரி. நான் போய் டிவி காண்பிச்சு சாப்பாடு ஊட்டறேன்.” என்றவாறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவளுக்கு தொலைக்காட்சி பார்க்க வேண்டும். குழந்தைகள் எதையும் எதிர்பார்த்த மாதிரி தெரியவில்லை. இந்நேரம் வரை அவள் தொலைக்காட்சிதான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் பசி என்றதும் இங்கே அழைத்து வந்துவிட்டாள்.
அவளும் கதவைத் திறந்து வெளியில் சென்றாள்.
அங்கே ரஞ்சனியும் நின்றிருந்தாள்.
“என்ன மகாலட்சுமி. இன்னிக்கும் இங்கிருந்துதான் சாப்பாடா?” என்றாள்.
அவள் கேட்பதைப் பார்த்தால் இது தொடர்கதைபோலிருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது.