“இவள் எல்லாம் ஒரு பொம்பளை. குழந்தைகளை பசியோட அழ விட்டிருவா. உங்க வீட்டுக்காரரு ஆண்பிள்ளை. அவர் சமைத்ததை எடுத்துக்கொண்டு போயிடுவா. இதனாலேயே அவளுக்கும், அவ வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இவள் கிடைத்ததை சாப்பிட்டுடுவா. பாவம் அந்த மனுசன் உழைச்சு களைச்சு வர்றாரு. அவருக்கு சரியான சாப்பாடு கொடுக்க வேண்டாமா? நிறைய நேரம் கடையில் வாங்கிட்டு வரச்சொல்லிடுவா. அப்படி என்னதான் வேலை வெட்டி முறிப்பாளோ தெரியலை.” என்றாள் எரிச்சலான குரலில்.
அப்போது ரஞ்சனியின் கணவன் வந்துவிடவே அவள் தங்கள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
மகாலட்சுமி இனி என்ன செய்வது என்ற யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். இன்றும் பாத்திரங்களை சுத்தமாக வழித்தெடுத்துக்கொண்டுதான் சென்றிருந்தாள் செல்வி. இவள் மளிகை என்ன இருக்கிறது என்று பார்த்தாள்?
ரவா இருந்தது. ரவா உப்புமா செய்வோமா? இல்லை தோசை செய்வோமா? என்ற யோசனையில் இருக்கும்போதே மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்தால் அங்கே களைப்புடன் மாதவன் நின்றிருந்தான்.
“குளிச்சுட்டு வந்துடறேன். பசிக்குது. சாப்பாடு எடுத்து வை.” என்ற கட்டளையுடன் குளிக்கச் சென்றுவிட்டான்.
இட்லி பொடி இருந்தது. பேசாமல் ரவா தோசை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தாள். மாவைத் தயார் செய்தவள் தோசை வார்க்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திலேயே அவன் வந்துவிட்டான்.
“சாயங்காலத்தில் இருந்து இதைத்தான் செய்தியா? எனக்கு ரவா தோசையே பிடிக்காது.” என்றான் எரிச்சலான குரலில்.
“இல்லை. நான் சமைச்சிருந்தேன். செல்வி வந்து எடுத்துட்டு போயிட்டாங்க.”
அவள் சொன்னதும் அவன் பேசுவதை விட்டுவிட்டு அவளை வெறித்தான்.
“செல்வி யாருன்னு தெரியும்ல.”
“தெரியும் ராஜசேகர் சித்தப்பாவோட பொண்ணுன்னு சொன்னாங்க.”
“தெரியுதுல்ல. மாமா எனக்கு அப்பா மாதிரி. அதனால் செல்விக்கு இங்கே எல்லா உரிமையும் இருக்கு. அவ வந்து சாப்பாடு எடுத்துட்டு போறதை குறையா சொல்றே? இது நான் சம்பாதிச்சது. என்னவோ உங்க வீட்டில் இருந்து எடுத்துட்டுப் போற மாதிரி பேசறே? அவங்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டியதுதானே?”
“என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா செஞ்சிருப்பேன். நீங்கதானே சாப்பாட்டை வேஸ்ட் செஞ்சா பிடிக்காதுன்னு சொன்னீங்களே.”