அடிக்கடி என்கிட்ட சண்டைக்கு வருவாங்க. மேலே டொம் டொம்னு சத்தம் வர்றதா சொல்லுவாங்க. நம்ம வீடுன்னு நம்மளால் நிம்மதியா இருக்க முடியாது. சொந்த வீடு இல்லாமல் இப்படி வாடகைக்கு வந்தால் சில இடங்களில் வீட்டுக்காரங்க பிரச்சினைதான் வரும். ஆனால் இது மாதிரி உள்ளவங்களும் நம்ம நிம்மதியை கெடுத்துடறாங்க.” என்றாள் வேதனையுடன்.
அவள் ரஞ்சனியின் கணவரைப் பார்த்திருக்கிறாள். கொஞ்சம் சாதுவாய்தான் தெரிகிறார்.
“சரி. இப்பத்தான் வர்றீங்க. உங்ககிட்ட புலம்பிட்டேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.”
அவளிடம் விடைபெற்று உள்ளே வந்த மகாலட்சுமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மாதவன் எப்போது வருவான்? அவனிடம் நடந்தது என்ன என்று எப்போது கேட்கலாம் என்று நினைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
இரவு உணவு சமைக்கும் போதும் அந்த சிந்தனைதான்.
அழைப்பு மணி ஒலிக்க ஆவலுடன் ஓடினாள். ஆனால் வெளியில் நின்றது மாதவனின் மாமா மகள். அன்று தன் பெயரைக் கூட அவளிடம் கூறாமல் சென்றவள். இப்போது குழந்தைகளுடன் வந்திருந்தாள்.
ஐந்து வயது சிறுமி ஒருத்தியும், இரண்டு வயதை ஒட்டி ஒரு சிறுமியுமாய் இரண்டு குழந்தைகள். அவளுடைய குழந்தைகளாகத்தான் இருக்கனும்.
“வாங்க.” என்று வரவேற்றாள்.
நீ என்னை வரவேற்கவில்லை என்றாலும் எனக்கென்றும் கவலையில்லை என்பது போல் அவள் அலட்சியத்துடன் உள்ளே நுழைந்தாள்.
“உங்க பேரு என்ன?” என்றாள் சிநேக பாவத்துடன்.
அவனுடைய உறவுகளை அவள் பழக்கிக்கொள்ள வேண்டுமே.
“ஏன் என் பெயரை சொல்லலைன்னா வீட்டுக்குள் விடமாட்டியா?”
இவள் எல்லாவற்றிற்குமே குதர்க்கமாகத்தான் பேசுவாளா?
“இல்லை. நீங்க ராஜசேகர் சித்தப்பாவோட பொண்ணு. அதான் உங்க பெயர் கூட எனக்குத் தெரியலையேன்னு கேட்டேன்.”
“செல்வி.”
“ஓ. குட்டீஸ் பேரென்ன?”
“பெரியவ ஈஸ்வரி, சின்னவ சங்கரி.”
அவள் சின்னக்குழந்தையிடம் கை நீட்ட அது அவளிடம் தாவியது. சிரிப்பு பொங்க தன்னிடம் தாவிய குழந்தையை அணைத்துக்கொண்டாள்.
“மாவு வாங்கிட்டு வரச்சொன்னேன். என் வீட்டுக்காரரு இன்னும் வரலை. சமைச்சாச்சா?”
“ஆச்சு.” என்றாள். அதன் பிறகு செல்வி நேரே சமையல் கட்டிற்குள் சென்றாள்.