“சொன்னேன்தான். அதுக்காக வீட்டுக்கு வர்றவங்களை பட்டினியா விடுவியா? கூடக்குறைச்சுதான் செய்யற மாதிரி இருக்கும். குடும்பப்பொம்பளை எல்லாத்தையும் பார்த்துத்தான் செய்யனும்.” பேசிக்கொண்டே ரவா தோசையை வேண்டாவெறுப்பாக சாப்பிட்டான். அவன் சரியாக சாப்பிடவில்லை என்றதும் பால் காய்ச்சி கொடுத்தாள்.
அவளும் சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டுச் சென்றாள்.
எங்கே அவன் உறங்கிவிடுவானோ என்ற கவலையுடன் உள்ளே சென்றவள் அவன் ஏதோ கணினியில் நோண்டுவது தெரிந்து தயங்கி அவனருகில் சென்று நின்றாள்.
“என்ன?”
“இல்லை. காலையில் கோயில்ல அவர் சொன்னாரே? அவர் ஏன் அப்படி சொன்னார்?” என்று தயக்கமாக்க் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதும் அவன் கடகடவென்று சிரித்தான்.
“அந்தாள் அப்படி சொன்னதும் நான் உன்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சியா? நான் உன்னைக் காதலிப்பதா? அதுவும் உன்னையா?”
அவன் அலட்சியத்துடன் கேட்டதும் அவளுக்கும் கோபம் வந்தது. அவள் எதில் குறைந்துவிட்டாள்.
“ஆனால் நீங்க ஜாதகத்தை மாற்றி எழுதியது உண்மைதானே?”
“ஆமாம்.” என்றான் நிமிர்வுடன்.”
“அதை எதுக்காக செஞ்சீங்க?”
“உன்னைப் பழிவாங்கத்தான்.”
“பழி வாங்கவா?”
“ஆமாம்.”
“நான் என்ன செய்தேன்?”
“அதை நீயே நினைச்சுப் பாரு.”
“என்னைக் கல்யாணம் பண்ணிட்டீங்க? எப்படி பழிவாங்குவீங்க?”
“ஓ. அதை உன் காதார கேட்கனும்னு ஆசைப்படறியா? நல்லாக் கேட்டுக்கோ. நீ பெயரளவுக்குத்தான் என்னோட மனைவி. ஒரு வருசம் வரைக்கும் உன்னை சகிச்சுக்குவேன். அதன்பிறகு நீ எனக்கு ஒரு வாரிசை பெத்து தர உனக்கு வக்கில்லைன்னு சொல்லி உன்னை ஒதுக்கி வைப்பேன். அதுக்கு அப்புறம் உன்னை எவன் கட்டுவான்? எவன் கட்டினாலும் பரவாயில்லை. நான் உன்னை ஒதுக்கி வச்சது உன் மனசை காயப்படுத்திக்கிட்டேதான் இருக்கும். எனக்கு அது போதும்.” அவள் மேல் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது அவன் பேச்சு.
வளரும்............