மகாலட்சுமியின் அலைபேசி அவளை அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். மாதவன்தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“நான் வந்துக்கிட்டிருக்கேன். என்னால் ரொம்ப நேரம் எல்லாம் காத்துக்கிட்டிருக்க முடியாது. உடனே கிளம்பு.” என்ற கட்டளையுடன் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அவள் பரபரப்புடன் கிளம்பினாள்.
“சுகன்யா. அவர் அழைக்க வர்றார். நான் கிளம்பறேன்.”
அவள் தன் பதிலைக் கூட எதிர்பாராது உடனே செல்வதைக் கண்ட சுகன்யா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
அவள் வாசலுக்கு செல்லவும், அவன் வண்டியை கொண்டு வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.
அவள் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
வண்டியில் செல்லும் போது அவனிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. அதனால் என்ன பேசுவதென்ற ஒத்திகையை மனதிற்குள் பார்த்துக்கொண்டாள்.
“இறங்கு.” என்று அவன் கூறிய பிறகுதான் அவளுக்கு வீடு வந்துவிட்டது தெரிந்தது.
அவள் இறங்கியதும் அவன் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவனுக்கு வேலை இருக்கிறதா? இல்லை தான் ஏதாவது கேட்போம் என்று தப்பித்து செல்கிறானா? அவள் குழம்பியபடியே தங்கள் வீட்டிற்கு வந்தாள்.
அங்கே பதட்டத்துடன் ரஞ்சனி நின்றிருந்தாள். அவள் பார்வை தரைத்தளத்தை பார்த்தவாறு இருந்தது.
“என்னாச்சு ரஞ்சனி?”
“இல்லை. அவர் கிளம்பறார். அதான் பார்த்துக்கிட்டிருந்தேன்.”
“அதற்கு ஏன் பதட்டமா இருக்கீங்க?”
“அதை ஏன் கேட்கறீங்க? எல்லாம் கீழ் வீட்டில் இருக்காங்களே. அவங்களுக்காகத்தான்.”
“அப்படி யாரு இருக்கா? அதற்கு ஏன் பயப்படறீங்க?”
“அதை ஏன் கேட்கறீங்க மகாலட்சுமி? கீழே ஒரு குடும்பம் இருக்கு. ஒரு அம்மாவும், பையன், பொண்ணு. மூன்று பேருமே சண்டைக்கு அலையறவங்க. இவர் போறப்ப வர்றப்ப எல்லாம் வீண் வம்புக்கு வர்றாங்க. அதான் பார்த்துக்கிட்டிருக்கேன்.”
“எல்லார்கிட்டயும் சண்டைக்கு வருவாங்களா?”
“உங்க வீட்டுக்காரர்கிட்ட எல்லாம் சண்டைக்கு வர மாட்டாங்க. அவரைப் பார்த்தாலே அடித்துவிடுவார் போல் இருக்குல்ல. அதற்கப்புறம் அவர்கிட்ட எப்படி தைரியமா சண்டைக்கு வருவாங்க. இளிச்சவாயா யாராவது கண்ணுக்குத் தெரிஞ்சா அவங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க.