நீங்க கூப்பிடலாம் என்று சொல்ல ஜனனிக்கோ அந்த குழந்தையின் அன்பு மனதில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
ஸ்வீனாவிடம் இருந்து சாப்பாட்டை வாங்கிய ஜனனி பேசிக் கொண்டே சாப்பாட்டை ஊட்ட தன்சிகாவும் மறுப்பு சொல்லாமல் வாங்கி சாப்பிடுவதை கண்ட ஸ்வீனா தப்பித்தாள் போதும் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ஜனனி தன்சிகாவுடன் வெளியே வரவும் உன் கிட்ட இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல... இவளை சமாளிக்க நான் ஒரு வழி ஆகிவிடுவேன் என்றாள் ஸ்வீனா.
ஜனனி அந்த குழந்தையுடன் நன்கு ஒன்றி இருந்தாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. எந்த குழந்தையையும் தள்ளி நின்று ரசித்து விட்டு நகர்ந்து கொள்வாள். ஆனால் தன்சிகாவுடன் எப்படி இவ்வளவு நெருக்கமாக பழகினேன் என்று தன்னையே கேள்வி கேட்டு கொண்டாள்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் தன்சிகாவை ஆபிசுக்கு அழைத்து வந்தாள் ஸ்வீனா. ஒவ்வொரு வாரமும் தன்சிகாவின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் ஜனனி.
தன்சிகாவும் அதே போல ஜனனியுடன் நன்கு ஒட்டி கொண்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை... தனக்கு சில டிரஸ்ஸஸ் திங்ஸ் வாங்க வேண்டும் என்று ஷாப்பிங் செய்ய வெளியே சென்றாள் ஜனனி.
தனக்கான பொருட்களை வாங்கி முடித்தவள் பில் போட செல்ல யாரோ ஹலோ... ஜனா என்று அழைப்பது அவள் காதில் தெளிவாக கேட்டது. அவளை அறியாமலேயே சத்தம் வந்த திசையை நோக்கி அவள் தலை திரும்பியது.
அவள் கண்கள் அந்த ஜனா யாராக இருக்கும் என்று ஆவலுடன் தேட அடுத்த நொடியே அவளுடைய ஆவல் அவளுக்குள் அடங்கி கொண்டது.
அந்த ஜனாவை பார்க்காமலேயே தன் முகத்தை மீண்டுமாக திருப்பிக் கொண்டாள் ஜனனி.
ஜனா என்ற அழைப்பில் ஜனனி திரும்ப அதற்குள் அழைத்தவன் என்னடா உன்னோட பொண்ணு எப்படி இருக்கா என்று மறு கேள்வியை அவன் பதிலுக்கு எதிர் பார்க்காமலேயே கேட்க ஜனனியின் முகம் தானாக திரும்பிக் கொண்டது.
டேய் ஜேம்ஸ் நீ எப்படா இந்தியா வந்த என்று ஜனா கேட்கவும் அவனும் பதில் சொல்ல அவர்கள் பேசிய மற்ற எந்த வார்த்தைகளும் உரையாடல்களும் ஜனனியின் கருத்தில் பதியவில்லை.
ஜனா என்ற பெயரைக் கேட்டதுமே அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வலைகள் பரவத் தொடங்கி இருந்தது. ஆனால் அவனது பொண்ணை பற்றி விசாரித்ததுமே அவளது மொத்த உணர்வுகளும் அடங்கி உணர்ச்சியற்றவளாக மீண்டும் தன்னை மாற்றிக்கொண்டாள் ஜனனி.