"மாயா! அவனை உள்ளே கூட்டிட்டுப் போயிடு! என் முன்னாடி அவனை நிற்க வைக்காதே!" வெறுப்புற்றவனாய் அவன் உரைக்க, வேறு உபாயமற்றவளாய், உடனடியாக அவனை அழைத்துச் சென்றாள் மாயா.
"உதய் வா!" என்றாள் அவள்.
"அண்ணி! நீங்களாவது புரிந்துக்கோங்க அண்ணி! நான் யாரையும் கஷ்டப்படுத்த இப்படி பண்ணலை!" என்றான் அப்பாவியாய்!
"என் கூட வா!" என்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் மாயா. இளையவனை அவனது அறைக்குள் அழைத்துச் சென்றவள்,
"என்னடா காரியம் பண்ண? ஏன் உன் புத்தி இப்படியெல்லாம் போகுது? நல்லா தானே இருந்த?" அவள் ஒருத்தி மட்டுந்தான் அவனிடத்தில் சாந்தமாக உரையாடினாள்.
"அண்ணி...! எனக்கு வேற வழி தெரியலை அண்ணி! அம்மாக்கு அவங்க சந்தோஷத்தை எப்படி திருப்பி தருவதுன்னு எனக்குத் தெரியலை...அதான் அப்படி பண்ணேன்!" என்றான் விசும்பியப்படி!
"என்ன விளையாடுறீயா உதய்? அவங்க சந்தோஷமே நீதானேடா!" என்றாள் தீர்க்கமாக!
"யார் சொன்னா அவங்க சந்தோஷமா இல்லைன்னு? நீ எங்கே போயிட்டன்னுத் தெரியாமல் எப்படி ஆகிட்டாங்கத் தெரியுமா? அவராவது படிப்பு, அது இதுன்னு அத்தையை பிரிந்து இருந்தாங்க! ஆனா, நீ..! இத்தனை வருடமா அவங்கக் கூடவே இருந்துட்டு எப்படிடா உனக்கு மனசு வந்தது?" என்றாள் புரியாமல்!
"அம்மா என்னால தானே..." என்று மீண்டும் அவன் தொடங்க,
"சும்மா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதே உதய்! அத்தையும், மாமாவும் பிரிந்திருந்தாங்கன்னு மட்டுந்தான் பெயர்..அவங்க மனதால இன்னும் ஒண்ணாத் தான் இருக்காங்க! என்னமோ உன்னால தான் எல்லாமே நடந்ததுன்னு நீயே சொல்லிக்கிற? உன்னை யாரு இங்கே வெறுத்துட்டா? ஏன் உன் அப்பா உன்னை வெறுத்தாரா?" சரமாரியாக வினாத் தொடுத்தாள் அவள்.
"வெறுக்கவே தானே அன்னிக்கு என்னைத் தூக்கிப் போட பார்த்தாரு!" என்றான் வெறுப்பாக!
"இதுதான் எல்லா மனுஷங்களும் பண்ற பெரிய முட்டாள்தனம்! என்னிக்கோ நடந்ததை வைத்து இன்னிக்கு சக மனிதனை எடை போடுற புத்தி உனக்குமே இருக்கா!" அவள் மொழிகளில் சீரிய ஞானம் வெளிப்பட்டது.
"அன்னிக்கு கோவிலில் நீ அவர்கிட்ட எவ்வளவு திமிரா நடந்துக்கிட்ட..! ஆதி அவரை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை ஒரு வார்த்தைக் கூட பேசினதில்லை தெரியுமா! அதையே ஆதி