கரங்களைத் தன் கண்களோடு ஒற்றிக் கொண்டான் உடையான். மனதிலான பாரமெல்லாம் குறைந்துப் போக,
"போகலாம் வாங்க! ரொம்ப நேரமாயிடுச்சு!" என்றுத் தாயினைத் தன்னோடு அழைத்தான் அவன். அவரிடத்தில் சிறு தயக்கம் மட்டுமே இருந்தது, ஆனால், அதற்கு எவ்வித மறுப்பும் இல்லை.
"அவ இங்கேயே இருக்கட்டுமேப்பா!" பரிந்துரை செய்தார் அகிலாண்டேஷ்வரி. யாரையும் நிமிர்ந்தும் பாராமல், 'இயலாது' என்பதாய் தலையசைத்தவன், தன் தாயினை எழுப்பி அவர் கரம் பற்றி வாயிலை நோக்கி நடந்தான். செல்லும் முன் ஒரு நொடி அவன் விழிகளுக்குள் புலப்பட்டது கங்காவின் பிம்பம்! வாயில் வரை வந்தவர், மனதில் ஏதோ துருத்த, ஏக்கத்துடன் தன்னவரை நோக்க, கலங்கியிருந்த விழிகளில் கண்ணீரினைத் தாங்கியவண்ணம், மலர்ந்தன அவர்தம் இதழ்களும்! அவர் அவனைத் தடுக்கவில்லை, புன்னகை மட்டுமே பூத்தார். அதிலே அறிந்துக் கொண்டது பெண்மனம், நிகழ்ந்தவை அனைத்துமே நாடகம் தான் என்று!
"உதய் எங்கே இருக்கான்னுக் கூட எனக்குத் தெரியலைப்பா! அம்மா உடல்நிலை மோசமாகிட்டு இருக்கு. ப்ளீஸ்ப்பா...அவனை வர வைக்க இதைவிட்டால் வேற வழியே இல்லைப்பா!" மன்றாடிய தனது மூத்தப் புதல்வனின் சொற்கள் அவர் செவிக்களுக்குள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.
அடுத்து என்ன செய்வதென்றே விளங்காமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யா. உடையான் ஒருவன் எடுத்த முடிவால் விளைந்தது எல்லாம் சங்கடமே! அந்த முட்டாளை எங்கேனும் கண்டால் பலிக் கொடுக்கவும் தயங்க மாட்டான் போலும்! ஆழ சிந்தனைக் கடலில் மூழ்கியிருந்தவன், வெளியே கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டு சிந்தனைக் கலைந்தான். வந்திருப்பது யாரென்று எட்டிப் பார்க்க மாயா செல்ல,
"நில்லு...போகாதே!" என்று அவளைத் தடுத்தான் ஆதித்யா. அவனது கோபத்தினை முன்னமே அறிந்திருந்தவள் செய்வதறியாதுத் திகைத்து நின்றாள்.
"என்னங்க...சொல்றதைக் கேளுங்க! அவன் ஏதோ தெரியாமல் பண்ணிட்டான்." மைத்துனன் இடத்தில் இருக்கும் மகனுக்காக மன்றாடினாள் அவள்.
"ஏதும் பேசாதே மாயா! தயவுசெய்து அமைதியா இரு! என்னை யாரும் இன்னிக்கு தடுக்காதீங்க..." அவன் எச்சரித்த வண்ணமே இருக்க சிரம் தாழ்ந்தவண்ணம் உள்ளே நுழைந்தான் இளையவன். தமையனைக் கண்டதுமே அவன் விழிகளில் கிலி படர்ந்திருந்தது.அச்சத்துடன் அவனை ஏறிட்டான் உடையான்.
"அம்மா வந்திருக்காங்கண்ணா!" நிலைமையை புரிய வைக்க முயன்றான் உடையான். பெரியவனின் பார்வை அவன் பின்னால் உணர்விழந்தவராய் வந்திருந்த தாயினை அடைந்தது.