தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 23 - சாகம்பரி குமார்
இப்போது மன்னிப்பு கேட்கும் படலம்! அந்த காட்சிக்குரிய நாயகி ரேச்சலை தனித்து சந்தித்தால்தான் மன்னிப்பு கேட்க முடியும் என்பது சத்யனின் அபிப்ராயம்.. அதனால் டாக்டர்.ஷீலாவின் கார் வெளியே கிளம்ப காத்திருந்தனர். அவர் சென்ற பிறகு ரேச்சலின் வீட்டிற்கு சென்றனர். ரஞ்சன், சத்யனுடன் நந்தினியும் சென்றிருந்தாள்.
"நீங்க மட்டும் போனால் தப்பா ஆயிடும். அதனால நானும் கூட வர்றேன்" என்று காரணம் சொன்னாலும், உள்ளுக்குள் அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்றியிருந்தது.
ரஞ்சன் இந்த விஷயத்தில் சரிவர ஈடுபாடு காட்டவில்லையோ என்று தோன்றியது. ஏனெனில் சத்யன் அவனை அழைக்கும்போது ஏதேதோ காரணங்கள் சொல்லி சத்யன் மன்னிப்பு கேட்பதை தவிர்க்க பார்த்தான். அதனால் சும்மா பெயருக்கு அட்டெனன்ஸ் தந்து விட்டு 'பேச்சு வார்த்தை முறிவு' என்று டிக்ளேர் செய்து விடுவானோ என்று அவளுக்கு தோன்றியது. அதனால் அவளும் உடன் சென்றாள்.
அங்கே செல்லவும்தான் தெரிந்தது வராண்டாவிலேயே ஜெமி அமர்ந்திருந்தான். இவர்களை பார்க்கவும் அவன் தந்த ரியாக்ஷன் அவ்வளவு நல்லதாக அவளுக்கு படவில்லை… என்னப்பா நடக்குது…?
இரண்டு பேரையும் சேர்த்து வைத்து 'சுபம்'னு என்ட் கார்ட் போடலாம்னு பார்த்தால் உள்ளடி வேலை செய்ய நிறைய ஆட்கள் இருக்கிறார்களே..
"ரேச்சல் இருக்காங்களா?" நந்தினிதான் ஜெமியிடம் கேட்டாள்.
"என்ன விஷயம் சிஸ்டர்?" அந்த மரியாதை ரஞ்சனுக்காக வந்தது.
"ஒரு முக்கியமான விஷயம் பேசனும்"
அவளை ஏற இறங்க பார்த்தவன்… ஒரு முடிவிற்கு வந்தவனாக,
"இருங்க கூட்டிட்டு வர்றேன்." என்று உள்ளே சென்றான்.
"என்னவொரு மரியாதை? வராண்டாவிலேயே நிக்க வச்சிட்டான்" ரஞ்சன் அலுத்துக் கொண்டான்.
"இதெல்லாம் ஒரு விஷயமா… அமைதியா இருப்பா" சத்யன் சொன்னான்.
"என்ன விஷயம் ரஞ்சன் அண்ணா?" அப்போது அங்கு வந்த ரேச்சல் மிடுக்காக கேட்டாள்.
"அது… உன்னை நேத்து தப்பா பேசிட்டதற்காக மன்னிப்பு கேட்கணும்னு சத்யன் சொன்னான்"
"மன்னிப்பெல்லாம் கேட்க தேவையில்லை… கல்லால் அடி வாங்கும் மரத்தின் வலி கல்லுக்கு புரியாது. ஏனெனில் மரத்தின் மீது மோதிய கல்லுக்கு எப்போதுமே வலிக்காது. அதது அப்படியே இருந்துட்டு போகட்டும். சிரிக்கவும் வேண்டாம்… அழவும் வேண்டாம்"
"நோ அப்படி சொல்லக் கூடாது… செஞ்சது தப்புனு தெரிஞ்சா கல்லுக்கும் வலிக்கும்" சத்யன்