கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அவர்கள் அனைவரும் அமர, மாப்பிள்ளைப் பையனும், அவருடைய அப்பாவும் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.
தரகர் தேவநாதனைப் பார்த்து, அவரையும் நாற்காலியில் உட்காரும்படி கண் ஜாடை காட்ட, “படக்”கென்று பக்கத்திலிருந்த நாற்காலியின் நுனியில் தயக்கத்துடன் உட்கார்ந்து கொண்டார் தேவநாதன்.
தரகர் சம்பிரதாயமாய் அறிமுகப் படலத்துடன் துவங்கி, பேசிக் கொண்டிருக்கும் போது,
முகம் நிறையப் புன்னகையோடு உள்ளே நுழைந்த அந்த ஜீன்ஸ் இளைஞன், உள்ளே வரும் போதே, “காரைப் பார்க் பண்ணிட்டு வந்தேன்...அதான் கொஞ்சம் லேட்!” என்று எல்லோரையும் பார்த்துச் சொல்லியபடி ஜமுக்காளத்தில் அமரப் போக,
“தம்பி...தம்பி...நீங்க ஏன் கீழே உட்கார்றீங்க!...உங்க அண்ணாவுக்கு பக்கத்துல இருக்கற நாற்காலில போய் உட்காருங்க!” என்று கூவினார் தரகர்.
அடுத்த விநாடியே அந்த இளைஞன் மாப்பிள்ளைக்குப் பக்கத்தில் இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தான்.
அவன் அமர்ந்ததும் தரகர் அவனையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார், “இவரு மாப்பிள்ளையோட தம்பி!...பெங்களூர்ல ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறாரு!”
அவன் பெண் வீட்டாரைப் பார்த்து மொத்தமாய்க் கை கூப்பி வணக்கம் தெரிவித்தான்.
தொடர்ந்து இரு வீட்டாரும் சில பொது விஷயங்களைப் பேச, தரகர் கண்ணுசாமி இடையில் புகுந்து அந்தப் பேச்சை மெல்ல திசை மாற்றி திருமணம் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தார். அவர் ஆரம்பித்ததுதான் தாமதம், அதற்கெனவே காத்திருந்தவர் போல் மாப்பிள்ளையின் தாயார் பெரிய குரலில் கேட்டார், “மொதல்ல பொண்ணை வரச் சொல்லுங்க பார்த்திடுவோம்!...அப்புறம் மத்த விஷயங்களைப் பேசுவோம்!”
“அதுக்கென்ன...தாராளமாய்ப் பார்த்துடலாம்!” என்ற தேவநாதன், மனைவியைப் பார்த்து, “பார்வதி...சுலோச்சனாவை வரச் சொல்லும்மா!” என்றார்.
சில நிமிடங்களில் அசாதாரண ஒப்பனையில் மிளிர்ந்த சுலோச்சனாவை அர்ச்சனா அழைத்து வந்தாள்.
ஜமுக்காளத்தில் நடு நாயகமாய் வந்து நின்ற சுலோச்சனா, எல்லோரையும் பார்த்துக் கும்பிட, எல்லோரும் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தபடியே, பதில் வணக்கம் தெரிவித்தனர்.
ஒரு கற்சிலையைப் போல அப்படியே சில நிமிடங்கள் நின்றிருந்த சுலோச்சனா, தொடர்ந்து என்ன செய்வதென்று புரியாதவளாய்த் தடுமாற, தேவநாதன் அவளைக் காப்பாற்றும் விதமாய், “அம்மா சுலோச்சனா!...போம்மா...உள்ளார போய் எல்லாருக்கும் காஃபி எடுத்திட்டு வந்து