" அப்பா! நம்மைப்போல் தானே மற்ற ஓனர்களும்! என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட் கிடைக்க டயம் ஆகத்தான் செய்யும். அதனாலே, மற்ற ஓனர்களுக்கு ப்ரெஷர் தர வேண்டாம். அநேகமா மூணு மாசம் ஆகும், எல்லாரும் பத்திரம் ரெடி பண்ண! முதல் ரெண்டு மாத ஊக்கத்தொகை மறந்துவிட வேண்டியதுதான். இல்லே?"
" பார்ப்போம்! நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன். மற்ற ஓனர்கள் போன் செய்தால், சமாளிக்கிறேன். கலா! நான் திரும்பிவர, ஒரு வாரம் ஆகும். பணத்தோட வரேன்!"
" சரிங்க!" நிரஞ்சனின் ஊர், குடந்தை! அதுவும், அவர் பெரிய வீடு இருக்கிற தெரு, மாமாங்க குளத்தெரு! சுலபமாக அவர் வீட்டின்மீது ரெண்டு லட்சம் கடன் புரட்டிவிடலாம்.
நிரஞ்சன் அன்றிரவே பத்திரத்துடன் ரயில் ஏறினார் நிம்மதியாக உறங்கி மறுநாள் காலை குடந்தை அடைந்து முதலில் வீட்டுக்குப் போனார்.
அந்த வீட்டில் வாடகை தந்து குடியிருப்பவர், சிடி யூனியன் வங்கியில் மேனேஜர் பதவியில் இருப்பவர்.
அவரிடம் நிரஞ்சன் தான் வந்த காரணத்தைக் கூறியதும், " கவலையே படாதீங்க! நான் வேலை செய்கிற பேங்கிலேயே ஒரே நாளிலே லோன் வாங்கித் தரேன். இன்றிரவே நீங்க பணத்துடன் சென்னை திரும்பிடலாம்....."
சொன்னபடியே அவர் அன்று மாலையே பணத்தைக் கொடுத்தார்.
அந்த இடைவேளையில் நிரஞ்சனுக்கு தொடர்ந்து ஓனர்களிடமிருந்து போன் வந்தவண்ணம் இருந்தது.
" நிரஞ்சன்! இந்த பிளாட் விற்கிற யோசனையே திடீர்னு வந்ததாலே, பணம் புரட்டி வேற வீடு வாங்கவோ வாடகைக்கு எடுக்கவோ அவசரமா முடியாதுபோல இருக்கு! இந்த பிளாட்மேல இருக்கிற கடனே இன்னும் அடைக்கலே, அதைவேறு அடைக்கணும். டயம் ஆகும். அதனாலே முதல்மாதம் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஊக்கத்தொகையை மிஸ் பண்ணிடுவோம்னு பயமா இருக்கு. இதே நிலமைதான் மற்ற ஓனர்களுக்கும். ஏன், உங்களுக்கும் அதே நிலமை தானே! அதனாலே, மனை வாங்கப்போகிற செட்டியார் அட்வான்ஸ் தர ஏற்பாடு செய்றீங்களா?"
" இத பாருங்க! என்னால் முடிந்ததை, நான் செய்தாகி விட்டது. இனிமேல் என்னால் செட்டியாரிடம் பேசமுடியாது நீங்க ஒண்ணு பண்ணுங்க! பத்திரங்களை எடுத்துக்கிட்டு வக்கீலிடம் போய் கேட்டுப் பாருங்க! அவர் சொன்னால் செட்டியார் கட்டாயம் தர முன்வரலாம்......"
நிரஞ்சன் அன்றைய இரவே கிளம்பி மறுநாள் காலை பணத்துடன் சென்னை திரும்பினார்.