தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்
நகருக்கு அருகாமையில் உள்ள கிராமத்து பண்ணை வீடு !. அதன் வாசலில் அழகிய மாக்கோலமிட்டு இருந்தது. முதல் பார்வையிலேயே அங்கு ஏதோ ஒரு விஷேசம் நடக்கிறது என்று தோன்றியது. அந்த அளவிற்கு வீட்டின் அலங்காரம் களைகட்டி இருந்தது. வாசலுக்கும் உள்ளுக்கும் ஆக நெடு நடை நடந்து கொண்டிருந்த பூரணி,
" எல்லா வேலையும் முடிந்து விட்டதா?. மித்தி வர நேரம் வீடு கசகசன்னு இருக்கக் கூடாது. எல்லாரும் சீக்கிரமா வேலையை முடிங்க " என்று மற்றவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
" அம்மா… எல்லா வேலையும் முடிந்து விட்டது. தம்பி வரவேண்டியதுதான். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று வேலை ஆட்கள் வரிசை கட்டி நின்றனர்.
" பூரணி, காலையில் இருந்து அனைவரையும் போட்டு படுத்திக் கொண்டிருக்கிறாய்... உன் பெரிய மகன் மித்ரன் என்ன வெளிநாட்டில் இருந்தா வருகிறான்?. இதோ டெல்லியில் இருந்து மாற்றல் ஆகி வருகிறான். அதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா?" என்று ராம்குமார் அலுத்துக் கொண்டார்.
"இருந்தாலும் என்ன… ?. என் மகன் டெல்லியில் இருந்து இங்கேவருவது எவ்வளவு முக்கியமான விஷயம். ஒவ்வொரு முறையும் அவனைப் பார்ப்பதற்காக நான் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அவனுக்கு வேலை பளு இடையில் வர முடியாது. விமான பயணம் எனக்கு ஒத்துக்காது. எனவே அவனை பார்ப்பது குறைந்து விட்டது. அவனுக்காக நான் எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்" என்று பூரணி அலுத்துக் கொண்டார்
"ஐயோ என் செல்ல அம்மா!. நீ உன் மகனைக் கூப்பிட்டு உன் பக்கத்திலேயே அமர்த்திக் கொள். அல்லது மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடு. இனி வரும் நாட்கள் எல்லாம் உனக்கும் உன் மகனுக்குமாகவே இருக்கட்டும். நானும் அப்பாவும் எங்கேயாவது ஓரமாக ஒதுங்கி நின்று பார்க்கிறோம் "என்று சைத்ரன் புலம்பினான்.
"ஆமாம்… அப்பப்ப டிபன் காபின்னு அவனுக்கு கொடுத்து கொஞ்சும்போது இந்த பக்கமும் ஒரு ப்ளேட் அனுப்பினால் போதும்"