"புரியவில்லை தாயே…"
"அவன் நயனிலன் குலத்தின் ஒரே வாரிசு. அந்த குலத்தையே அழிக்கும் சபதம் ஏற்ற கங்காலன் காத்திருக்கிறான். அவனுக்கு அதற்கான அதிகாரமும் உள்ளது."
"நயனிலன் என்றால் நீதி இல்லாதவன் அல்லவா… அந்த குலம் காக்கப்பட வேண்டுமா?"
"அது மூத்தோர் செய்த பிழை. அந்த குலம் காக்கும் தெய்வமாக நானல்லவா இருக்கிறேன்… காப்பாற்றுவது என் கடமை"
"இது என்ன விந்தை… அழிக்க ஒருவனாம்.. காக்கவும் ஒருவராம்… கேட்டால் விதி என்று சொல்கிறீர்கள். உங்களால் அதை மாற்ற முடியாதா… "
"கங்காலனின் சபதத்தை முறித்து நயனிலன் குலம் காக்க அவளால்தான் முடியும். இவ்வளவு காலமாக அவன் எல்லை தாண்டி இருந்ததால் கங்காலனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது அவனுக்கு வாய்ப்பாகி விட்டது. "
"உங்களால் முடியாத செயலை யாரால் செய்ய முடியும்."
"அன்பால் முடியும்… தன்னலமில்லாத அன்பால் முடியும்… விதியை மாற்றும் மாயங்களை அன்புதான் செய்யும்"
"அப்படி எனில் அவளை அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்."
"ம்… மனித மனம் விந்தையானது. கண்கட்டு வித்தையை செய்து விடும். ஆபத்தில் இருப்பவனுக்கு தப்பி பிழைக்கும் வழியை காட்டினாலும் அதனுள் பயணிக்கும் முடிவை அவன்தான் எடுத்தாக வேண்டும்."
"புரிகிறது… இப்போது என்ன செய்வது?"
"அவனுக்கு வரப்போகும் துன்பங்கள் உந்து சக்தியாக மாற வேண்டும். அந்த பாதைக்குள் அவனை இழுத்து செல்ல வேண்டும். அதற்கான தன்னுடைய போராட்டத்தை அவன்தான் நடத்த வேண்டும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்."
(தொடரும்)
டியர் ரீடர்ஸ்,
சமயத்தில் இப்படித்தான் நிகழும்… நாம் ஒன்றை தேடிக் கொண்டு இருக்கும்போது நாம் தொலைத்த வேறு ஒன்று கிடைத்து விடும்.
அதுபோலத்தான் அமானுஷ்யம் என்பதன் உளவியல் அடிப்படையை தேடும்போது சில செய்திகள் எனக்கு கிடைத்தன். குலதெய்வங்கள்… காவல் தெய்வங்கள் பற்றிய செய்திகள். அவற்றை இணைத்து ஒரு காதல் கதை சொல்ல ஆரம்பிக்கிறேன்.
இந்த கதையில் வரும் சில செய்திகள் உங்களை கடந்தும் சென்றிருக்கும். புதிதாக கேட்பவர்கள்… நம்புவதும் நம்பாததும் உங்கள் சாய்ஸ்…
கணவன் மனைவி உறவு நீடித்து நிலைத்து நிற்க ஒரு மகத்தான சக்தி வேண்டும். அதை அடைய சில தகுதிகளும் வேண்டும்.அதை விளக்கக்கத்தான் இந்த கதை.
குலதெய்வம்...கங்காலன்..நயனிலன் குலம்… இதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்.
அன்புடன்
சாகம்பரி
Next episode will be published on 24th Nov. This series is updated weekly on Tuesday evenings.