தூய்மையான அன்புக்காக, நம்பிக்கையான உறவுக்காக ஏங்கறோம்னு புரிஞ்சிருக்கும் உன்னையும் உங்க குடும்பத்தையும் கடவுள்தான் சமயம் பார்த்து என்னோட சேர்த்து வச்சிருக்காரு! சரி, வச்சிடவா?"
" நீங்க சொன்னதை செய்து முடிக்கிறதுதான் என் முதல் வேலை! கவலைப்படாமல் மற்ற வேலைகளைப் பாருங்க!"
" ஒரு விஷயம்! என்னோட ஆடிட்டரிடம் உன்னைப்பற்றி சொல்லியிருக்கிறேன். அவரே உனக்கு போன் பண்ணுவாரு. மற்ற ஓனர்களுக்கு பணம் தருவது அது இது எதுவானாலும், வக்கீலும் நீயும் பேசி முடிவு பண்ணி ஆடிட்டரிடம் சொல்லி, பணத்தை வாங்கி பட்டுவாடா செய்யுங்க! ஒவ்வொன்றுக்கும் என்னை கேட்கவே வேண்டாம். உம், சாம்புவிடம் நீ பேசாதே! அவன் நம்பத்தகுந்த ஆளில்லை! வச்சிடவா?"
செட்டியார் சொன்னதை கலாவும் சேகரும் கேட்டு பூஜையறைக்கு ஓடி ஓவென கதறினர், அந்த ஆண்டவன் முன்பாக!
இப்படி ஒரு பிரேமையா! இவ்வளவு அன்பா! இத்தனை நம்பிக்கையா!
இறைவா! நம்பவே முடியலே! என்று கதறினர்.
நிரஞ்சனும் கலங்கி நின்றான்.
அந்த நேரம் பார்த்து, அவருடைய போன் சிணுங்க, எடுத்துப் பேசினார்.
" தலைவா! ஓனர்கள் வந்துட்டாங்க! வரீங்களா?"
" இதோ வரேன்!"
நிரஞ்சன் அவர்களுடன் சேர்ந்து கொண்டபோது, மற்ற பத்து பேரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.
" இதென்ன புதுசா இருக்கு, மரியாதை? எழுந்து நிற்கறீங்க? நின்றுகொண்டே மீட்டிங்ல பேசப்போறீங்களா? ஏன் திடீர்னு மாற்றம்?"
" நிரஞ்சன்! இத்தனை நாளா ஒரே ஒரு ஓனர்தான் உங்களை 'தலைவா'ன்னு கூப்பிடுவாரு, இனிமேல் நாங்க எல்லாருமே உங்களை தலைவர்னு அழைப்போம்"
" அதுதான் ஏன்னு கேட்கறேன்?"
" தலைவா! உங்களைத் தவிர வேற எந்த ஓனராலே, பிளாட்டுக்கு ஒரு கோடி ரூபா விலையும் ஊக்கத்தொகை ஐம்பது லட்சமும் வாங்கித் தரமுடியும்? நம்பவே முடியலே நாற்பது ஐம்பது லட்சம் கிடைச்சாலே போதும், விற்று விடலாம்னு இருந்தோம். ரெண்டு மடங்கு விலையும் பல லட்சங்கள் ஊக்கத் தொகையும் வாங்கித் தந்த உங்களை தலைவான்னு கூப்பிடலேன்னா வேற யாரை கூப்பிட முடியும்?"
எல்லாரும் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.