தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 02 - சாகம்பரி குமார்
பூங்காத்தம்மன்… பத்து கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவியிருக்கும் கடற்கரையோர அரவூர் கிராமத்தை காக்கும் காவல் தெய்வம்.
கடற்கரை அருகில் இருப்பதால் புழுதி காற்று.. கடுங் காற்று… கொண்டல் காற்று… புயல் காற்று… மட்டுமல்ல சூறை காற்றும் வீசும் பாலை நிலம். அகப்பட்ட அத்தனையையும் சுற்றி சுழற்றி போடும் சூறாவளி காற்றிலும் மண்ணை விட்டு வேரும்… வேரை விடுத்து செடியும்… செடியை விட்டு பூவும் வீசி எறியப்படாமல் காப்பவள்… அதுபோலவே குடும்பத்தையும் சிந்தாமல் சிதறாமல் காத்திடுவாள் என்பதால் அப்படி ஒரு பெயர் தாங்கினாள். நாடோ… ஊரோ… கிராமமோ… அரச பரிபாலனம் செய்ய பரிவாரங்கள் வேண்டும் அல்லவா… அப்படி கிராமத்தின் எட்டு திசைக்கும் காவல் வைக்கப்பட்ட சிறு தெய்வங்களுக்கு தினமும் கவளம் சோறு படியளப்பது அன்னையின் கடமை.
அன்றும் தன் கடமையை செய்து திரும்பும்போது உடன் வந்த பரிவார தெய்வங்கள் கேட்ட கேள்விக்கு அன்னை பதிலளிக்கலானாள்…. அந்த கேள்வி என்னவென்றால்..
"காவல் தெய்வமான நீ எப்படி தாயே குல தெய்வமானாய்… அதுவும் நயனிலன் குலத்தை காக்கும் சத்தியத்தை எப்படி ஏற்றாய்?"
அப்போதுதான் நயனிலன் குலம் பற்றி அன்னை விளக்கிளாள்.
பண்டை நெடுங்காலத்து முன்…
இளமாறன்… பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில பகுதி… அதன் சிற்றரசன் வலியமார்பனிடம் குதிரைப்படை தலைவனாக இருந்தான். அரசனின் நன்மதிப்பை பெற்ற அவன் எல்லையை பாதுகாக்கும் பணியை செய்து வந்தான்.
கார்குழலி அவனுடைய மனைவி.. கணவனைப்போல அவளும் வாட்போரில் சிறந்து விளங்கியவள். இளமாறன் அவளை வாட்போரில் வென்று காதல் கடி மணம் செய்தான். இப்போது கார்குழலி இல்லம் காத்து அறம் செய்து கொண்டிருக்கிறாள்.
சாளுக்கியர்களின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்வதால் இளமாறன் இல்லம் விடுத்து எல்லை செல்வதும்… சொற்ப காலமே அவளுடன்