பிள்ளையாக காக்கும் பாசக்காரி…'
குழலிக்கு கண்கள் கலங்கின… இறைவா.. இந்த உலகில் என்ன நடக்கிறது… தெய்வமே கலங்கி நிற்கும் அளவிற்கு அநீதி பெருகி விட்டதா…
"உனக்கு என்ன இடுங்கண் நேர்ந்தது தாயே…"
"ம்… நான் என் பரிவாரங்களுடன் என் காவல் பொறுப்பை செய்து வந்தேன். மலையாள தேசத்திலிருந்து வந்த மந்திரவாதி ஒருவன் மந்திரங்களால் கட்டி என்னை செயலிழக்க வைத்து விட்டான். நான் ஊர் காவல் பார்த்து இருபது நாட்களாகி விட்டன."
"உன்னை எப்படி அவனால் கட்டுபடுத்த முடியும்?"
"நான் அனைத்து சக்திகளையும் படைத்த கடவுள் அல்ல. குறிப்பிட்ட காரியங்களை செய்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட சிறு தெய்வமாகும். எல்லைக்குட்பட்டதே என் சக்தியாகும். சில மந்திர ஒலிகளையும்… பூஜை முறைகளையும் கொண்டு என்னை கட்டுபடுத்த முடியும். மதுரமாயன் போன்ற மந்திரவாதிகள் இதில் கை தேர்ந்தவர்கள். "
"சரி உன்னை கட்டுப்படுத்தி என்ன செய்ய போகிறான். பொதுவாக காவல்காரர்களை கட்டுவது திருட்டை செய்யத்தான். இங்கே அப்படிப்பட்ட உயர்வான பொருள் இருக்கிறதா என்ன?"
"அவனுடைய எண்ணம் அதுவல்ல… என்னைப் போன்ற சிறு தெய்வங்களை கொண்டு போய் அவனுடைய இடத்தில் வைத்து அவனுடைய கட்டளையை நிறைவேற்றும் ஏவலாள் போல ஆக்கி விடுவான். அவனுக்கு அதீத சக்திகளை நாங்கள் பெற்று தருவோம். இது போன்ற துஷ்டர்களிடம் கட்டுப்பட யாராவது விரும்புவார்களா என்ன..?"
"ஓ…"
"தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் என்னை கட்டுபடுத்தி விட்டால் அவனுடைய இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதற்குள் மந்திரகட்டிலிருந்து நான் வெளியே வர வேண்டும்… எனக்கு உதவி செய்வாயா..?'
"நான்… நான்.. என்ன செய்ய முடியும்?"