"அவன் இப்போது தன்னுடைய அடிமைகளுடன் வந்த விடுவான் இன்று அவன் பூஜையை தடுத்தாக வேண்டும். அவன் மந்திரம் சொல்லி முடிக்கக் கூடாது…"
"நீதியின் மீது நம்பிக்கை வைத்து நான் முயற்சி செய்கிறேன். இன்று அவனுடைய திட்டம் தோற்று விடும். உன்னை அவனால் கொண்டு செல்ல முடியாது" குழலி வாக்கு தந்தாள்.
"குழலி விரைவாக எழுந்திரு. யாரோ வரும் சத்தம் கேட்கிறது. நாம் மறைவிடம் நாடி செல்ல வேண்டும்" என்று இளமாறன் பரபரப்பாக சொல்லவும் அவளுக்கு புரிந்துவிட்டது.
பூங்காத்தாள் சொன்ன மந்திரவாதி தன் அடிமைகளுடன் அங்கு வந்து விட்டான். இன்னும் சற்று நேரத்தில் பூஜை ஆரம்பிக்க தயாராகிவிடுவான். அவனை தடுப்பது எப்படி என்று யோசிக்க வேண்டும் என்று எழுந்தாள்.
கணவனுடன் சற்று தள்ளி இருந்த மறைவிடம் நாடி சென்றாள். வெளியே இடி மின்னலுடன் பெரும் சப்தத்துடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. மந்திரவாதி தன்னுடைய பொதி மூட்டைகளை பிரித்து பூஜை பொருட்களை பரப்பினான்.
"அவன் யார்… இங்கு என்ன செய்கிறான்?" இளமாறன் மெல்லிய குரலில் வினவிக் கொண்டான்.
"அவன் மந்திரவாதி… பூங்காத்தாளை கட்ட வந்துள்ளான்…" குழலி குரலடக்கி பதில் அளித்தாள்.
"என்ன.. திருட்டு கும்பல் போல இருக்கிறார்கள். மாயம் மந்திரமென்று கதை சொல்கிறாய்.. யார் அந்த பூங்காத்தாள்?'
"அதை பிறகு விளக்குகிறேன். உடனடியாக அவனை தடுக்க வேண்டும். "
"ஆஹாங்… கட்டளையிடுகிறாயா… இது போன்ற ஏமாற்றுகாரர்களுடன்.என்னை சண்டையிட சொல்கிறாயா… சம பலமுள்ள வீரனுடன் போரிடுவதே…" அவன் பேசும்போதே… வாளை பிடித்திருந்த கையை உயர்த்தி பிடித்து அவனை கோவிலுக்குள் தள்ளி விட்டாள்.