அடி வாங்குவ அம்மு ஏ ராசாத்திய நான் பாத்துக்கிட மாட்டனா......ஆசுரமம் கீசுரமம் சொல்லிட்டு இருக்கவ. ஒனக்கு ஒன்னு ஆவாது புள்ள அடம்புடிக்காம வா அம்மு ஒரு வாட்டி ஆசுபத்திரி போய்ட்டு வருவோம்.
நா அங்கன இருந்துதா வாரே புள்ள .....எனக்கு புத்து நோய் முத்தி புடுச்சா இனிமே ஒன்னு பண்ண முடியாது சொல்லிபுட்டாக..... அதா அங்கன இருந்த ஒரு டாக்குடருதான் ஆம்புலன்சுல கூட்டியாந்து இங்கவிட்டு போனாக....
எனக்கு உன்னோட நினப்புதா வந்துச்சு புள்ள.... எனக்குனு யாரிருக்கா....நா சாககுள்ள உன்னய பார்த்து புட்டு ஏ புள்ளய உன்னட்ட ஒப்படைச்சுபுட்டு போவோனும்னு..... உசுர கைல புடிச்சிகிட்டு கிடந்தே மங்க. அந்த கடவுள் உன்னய பார்க்கவாவது வுட்டுச்சே.... ஏ மகராசிய நல்லா படிக்க வச்சு பெரிய ஆளா ஆக்க கனா கண்டேனே.......இப்படி யாரு இல்லாத அனாதையா ஆக்கிப்புட்டேனே ஏ தங்கத்த..... அவள பார்த்துக்கிடுதியா புள்ள..... கண்ணீர் மல்க கேட்க .......
நிலைமையின் வீரியம் இப்பொழுதுதான் மங்கைக்கு புரிந்தது. இனி தன் தோழி உயிருடன் இருக்க போவதில்லை என்பது தெரியவர..... கண்ணில் நீர் வடிய ......நீ வெசனபடாத அம்மு. இனிமேலு தேனு என் புள்ள உன்னோட கனாவ நா நிறைவேத்துறே புள்ள. எப்படியாவது அவள படிக்க வைச்சு ஒரு நல்லவன் கைல புடிச்சுக்குடுக்குறே புள்ள இது உன் மேல சத்தியம்.
கண்ணில் நிம்மதி பரவ கண்ணீருடன் அவள் இறுதி மூச்சினை துறந்தாள் அமுதா..
மங்கை கூக்குரலுடன் அழ.......
சத்தம் கேட்டு அங்கே சென்று கொண்டிருந்த ஓரிருவர் வந்து பார்க்க செய்தி பரவி ஊர் கூடிவிட செய்யவேண்டிய சடங்கையும் மங்கையும் அவளது கணவன் வெங்கடாசலமும் சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.
அமுதாவை அடக்கம் செய்த கையோடு அனைவரும் கலைந்து விட..... மங்கையும் அவளது கணவனும் அமுதாவின் வீடு நோக்கி புறப்பட்டனர்.
வீட்டு வாசலில் மங்கையினை கண்ட தேன்மொழி கண்ணில் கண்ணீரோடு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.மங்கையும் கண்ணீரோடு அவளை தூக்கி அணைத்து அழுத படியே வீட்டிற்குள் நுழைந்தனர்.
மங்க பொறப்படலாமா.....
ஏங்க ஒரு மூணு நா(ள்) இங்க இருந்து விளக்கு ஏத்திபுட்டு பிள்ளையையும் கூட்டிகிட்டு வந்துடுறேனுங்க...