"ஆன் தி வேன்னு சொன்னாங்க" மீனா சொல்லும்போதே...
"வந்திட்டேன் ஹைந்தா… எல்லாம் தயாராக இருக்கா?" இன்ஸ்பெக்டர் மேகலா வந்து கொண்டிருந்தாள்.
"எல்லா ரிப்போர்ட்டும் ரெடி மேடம்."
"ஓகே.. நாம க்ளியர் பண்ண கேஸ்களை அவரோட கவனத்திற்கு போகற மாதிரி அடுக்கி வை. பெண்டிங் கேஸ்களை ப்ராஸஸிங்னு போடு"
"சரிங்க மேடம்" மீனா தலையாட்டினாள்.
அப்போது வாசலில் ஜீப் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
"ஏஎஸ்பி சார் வந்துட்டார் போல" மேகலா சுறுசுறுப்பாக வாசலுக்கு விரைந்தாள். அவளுடன் ஹைந்தவியும் விரைந்தாள்.
'யார்னு தெரியலையே… கேள்வி கேட்டு குடையாமல் இருந்தால் போதும்' மனதிற்குள் எண்ணியபடி சல்யூட் அடிக்க தயாராக நிமிர்ந்து நின்றாள்.
ஆனால் அவளுடைய நினைப்பில் மண்ணை வாரி போட்டவனாக ஜீப்பிலிருந்து அவன் இறங்கினான். அச்சோ… இவனா…? ஹைந்தவி அதிர்ந்தாள்.
இவன் முன்னாடிதான் பெண்டிங் கேஸ் பற்றி உளறி கொட்டினாள். அவனுக்கு… கரெக்ஸன் ப்ளீஸ்… அவருக்கு - உயர் அதிகாரிக்கு மரியாதை தரணுமே…, வானவில் கம்பெனியில் என்ன வேலை…? சைத்ரனுடைய அண்ணன் மித்ரன் டெல்லியில் இருந்து வருவதாக சொன்னானே… அவர்தானோ..?
ரொம்ப மோசம்… அவர் யூனிஃபார்மும் போடவில்லை.. போட்டிருந்தால் கவனித்திருப்பாள். அவளை கவனிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் ஏஎஸ்பி மித்ரன் அவளை பார்த்த பார்வை கேள்வியாக இருந்தது… ஆவ்… பார்த்துட்டாரு போலியே… எல்லாம் இந்த சைத்ருவால வந்ததது.. அத்தனையும் உளறி கொட்டி விட்டாள்…
அவனுக்கு சல்யூட் அடித்த மேகலா… அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினாள்.