காதல் கல்யாணம் பண்ணிகிட்டானு உங்கம்மாவை ஒதுக்கி வச்சது என் தப்புதான்… உங்கப்பாவும் அவளை விட்டுட்டு ஓடிப்போய் மிலிட்டரில சேர்ந்துட்டான். அங்கேயே வேற குடும்பம்னு செட்டில் ஆயிட்டான். என்.பொண்ணும் நல்லா வாழலை… நானும் நிம்மதியா இல்லை."
"பாட்டி எப்பவும் புலம்பிகிட்டே இருக்காதீங்க. அம்மா இறந்துபோய் நான் தனிச்சிருந்த சமயத்துல நீங்க வந்ததே என்னுடைய நல்ல நேரம்தான்… கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்"
அவள் சமையலறைக்கு சென்று பாட்டி குளிக்க சுடுதண்ணீர் வைத்தாள். பாத்திரத்தில் இருந்த காபியை சூடு பண்ணி குடிக்க ஆரம்பித்தாள்.
ப்ச்… தாயில்லாமல் அவள் தனித்து வாழ்ந்திருந்த அந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் அதிலும் அந்த கொடூரமான சம்பவம்… பல நாட்கள் அவளை தூக்கம் இழக்க செய்து விட்டது.
அன்று என்ன நடந்தது என்பதை இன்றுவரை அவளால் யூகிக்க முடியவில்லை. ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்கவும்.முடியவில்லை. பாழாய் போன அப்பா பாசத்தால் வந்த வினை…
ம்… இந்த பாட்டி வேற கல்யாணம் கல்யாணம்னு அனத்துறாங்க… அதெல்லாம் அவளுக்கு தேவையில்லை. அநாதைக்கு உறவுகள் வேண்டும் என்ற நினைப்பே தவறுதான்.
"செல்லம் குளிக்க போலாமா?" பாட்டி குரல் கேட்க,
"ரெடி பாட்டி…" கை தாங்கலாக பாட்டியை அழைத்து சென்று குளிக்க வைத்து உடை மாற்றி விட்டாள்.
"இதல்லாம் நானே செஞ்சிப்பேன் செல்லம்"
"தடுமாற்றத்துடன் செய்றீங்க பாட்டி. நான் செய்றதுல சங்கடப்படாதீங்க. எங்கம்மாவுக்கு நீங்க எவ்ளோ செஞ்சிருப்பீங்க?"
"கணக்கு டீச்சர் பேத்திதான… கணக்கா பேசற"
"ஓகே பாட்டி நானும் ரெடி. வாங்க போகலாம்"
மயூரி பாட்டியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள். நல்லபடியாக பூஜையை முடித்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்தனர். அப்போது,