"சார்… எச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் நான் மயூரியை விட்டு விலக மாட்டேன். அவள் என் உயிர் தோழி. அவள் ரொம்ப பாவம் சார்"
"ஓ…" அவன் அலட்சியமாக சொல்லிவிட்டு வெளியேறினான்.
ஆட்டோவிலிருந்து இறங்கிய மயூரி, "பாட்டி" என்று அழைத்தபடி உள்ளே சென்றாள்.
"மயூரி… வந்திட்டாயாம்மா… வர லேட் ஆகும்னு நினைச்சேன்" பாட்டி சொன்னார்.
"அதெப்படி பாட்டி. ரொம்ப நேரம் உங்களால தனியா சமாளிக்க முடியாது. சீக்கிரம் வந்துடுவேனு சொல்லிட்டுதான போனேன்… சரி… மருந்து எடுத்துட்டு வரேன். நீங்க மெடிசன் சாப்பிடற டைம் ஆச்சு" அவள் விரைந்து சென்று மருந்துடன் திரும்பினாள்.
ப்ளாஸ்கில் இருந்த சுடுதண்ணீரை எடுத்த தந்து பாட்டியை மாத்திரை விழுங்க வைத்தாள்.
" பாட்டி அந்த பிண்ட தைலம் போட்டதும் உங்களுக்கு மூட்டு வலி குறைஞ்சிட்டது போல… ராத்திரி நிம்மதியா தூங்கினீங்க. இப்ப ஒரு தடவை போட்டு விடவா?"
"ஆமாம் செல்லம்… அது வலிக்கு நல்லா கேட்குது… இப்ப போட்டு விடு. சுடுதண்ணீரில குளிச்சிட்டு வரேன். நல்லா நடக்கவும் முடியுது… அதனால சிவன் கோவிலுக்கு போயிட்டு வரலாமா?"
"கொஞ்சம் சரியானதும் ஊர் சுத்திங்கா?." சிரித்த பேத்தியின் முன் நெற்றியில் விழுந்திருந்த கற்றை முடியை ஒதுக்கிய பாட்டி,
"சுத்தற வயசா எனக்கு?. ஆண்டவா என் பேத்திக்கு ஒரு நல்ல வழியை காட்டுனு சொல்லத்தான் போறேன். ம்… வயதான காலத்துல நிம்மதியா போய் சேரணும்"
படக்கென்று பாட்டியின் வாயை மூடிய மயூரி..
"பாட்டி அப்படி சொல்லக் கூடாது. உங்களை விட்டா எனக்கு யாரும் இல்லை. நீங்க ரொம்ப நாள் வாழணும்." என்று கண்கலங்கினாள்.
"அதைத்தான் நானும் சொல்றேன்… உனக்கு ஒரு துணை வந்துட்டா நிம்தியா இருப்பேன். நீ எத்தனை அருமையான பெண். எல்லாம் சரியாக நடந்திருந்தால் உனக்கு நல்ல குடும்பம் இருந்திருக்கும்.