மைத்தியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு மறுபடியும் செல்ல ஓரளவு பணக்கஷ்டம் முடிவுக்கு வந்தது.... அனந்துவின் சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்தாலும் கடனில்லாமல் காலந்தள்ள ஆரம்பித்திருந்தார்கள்...
மைத்தி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தொலை தூரக் கல்வி முறையில் வணிகம் கற்க ஆரம்பித்தாள்.... பகுதி நேரமாக அகாடமியில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தாள்.... கூடவே கடந்த ஒரு வருடமாக அவளுக்கு ஸ்பான்ஸரும் கிடைத்துவிட்டதால் பயிற்சி எந்த தடங்கலும் இல்லாமல் சென்றது.... இப்பொழுது மைத்தி இளநிலை இரண்டாம் வருடத்தில் இருக்கிறாள்....
மாது இப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறான்.... aeronautical engineering படிப்பதே லட்சியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்...
ரகு அரசாங்க வேலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறான்.... கூடவே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறான்....
பத்ரியும், காமேஷும் இளங்கலை படிப்பை முடித்து முதுகலை தொலை தூரக் கல்வியில் படித்தபடியே தனியார் அலுவலகத்தில் வேலையில் உள்ளனர்...
இரண்டாவது மாமாவின் பெண் கல்யாணிக்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்...
கடைசி மாமாவின் செல்வங்கள் இருவரும் கல்லூரி இறுதியாண்டில் இருக்கின்றனர்...
காமாட்சி பாட்டி இப்பொழுது மயிலாப்பூர் அறிந்த தையல்கலை நிபுணர் ஆகிவிட்டார்.... மயிலை தவிர மற்ற இடத்திலிருந்தும் பெண்கள் அவரிடம் தைக்க கொடுக்க வரும் அளவு பிரபலமாகிவிட்டார்.... பெண்கள் போக இப்பொழுது சிறுமிகள் உடையும் தைக்கிறார்... ஆர்டர்கள் அதிகம் வருவதால் இரண்டு பெண்களை வேலைக்கு வைத்துள்ளார்... அந்தளவு முன்னேற்றம்...
கற்பகம் பாட்டியும் சிறிய மெஸ் ஒன்றை ஆரம்பிக்க அதுவும் தூள் கிளப்புகிறது... மாலை வேளைகளில் ஐந்து முதல் எட்டு மணி வரையே கடை இருக்கும்... பார்சல்கள் மட்டுமே... தரமான வீட்டு உணவு என்பதால் நிறைய வாடிக்கையாளர்கள்...
கூடவே இப்பொழுது அப்பளம், பொடி வகைகள், ஊறுகாய் ஆகியவற்றை தன் பெரிய மாட்டுப்பெண் மற்றும் காமாட்சி பாட்டியின் உதவியுடன் செய்து அக்கம் பக்க கடைகளுக்கும், தெரிந்தவர்களுக்கும் விற்று வருகிறார்...
இப்படியாக சுப்ரமணியத்தின் குடும்பம் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்தினாலும், பெரியவர்களின் அயராத உழைப்பினாலும் உயர ஆரம்பித்தது....