எனவும் சொல்லி சம்மதம் வாங்கினர். ரம்யா குவிஸ் போட்டிக்கு மட்டும் பெயர் கொடுத்தாள். வகுப்பு மாணவர்கள் பலர் ப்ரோக்ராம்மிங் போட்டியில் பெயர் கொடுத்து இருந்தனர்.
சிம்போசியம் நடக்கும் அந்த நாளும் வந்தது. அவர்கள் கல்லூரியில் மத்திய அரசிடம் நிதியுதவி பெறும் ஆராய்ச்சி மையக் கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கே தான் அந்த சிம்போசியத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ரம்யாவிற்கு அவளின் சித்தி தான் சேலை உடுத்தி விட்டார், அதை மாலை அவளின் கல்லூரி முடியும் நேரம் வரை, கலையாமல் இருக்க பல இடங்களில் சேப்ட்டி பின் கொண்டு இறுக்கிப் பின் பண்ணியிருந்தார். அவளும் மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். காலையில் அவள் சேலையில் வரும் அழகைக் காணக் காத்திருந்தவளாய் சத்யா, அவளின் தலையில் ஒற்றை மஞ்சள் ரோஜாவையும், சிறிய மல்லிகை சரத்தையும் சூடிவிட்டாள். சூப்பரா இருக்கடி என்று சொல்லிவிட்டு அவளின் கல்லூரிப் பேருந்துக்கு அவள் சென்றுவிட்டாள். தனது கல்லூரி பேருந்தில் ஏறிய ரம்யாவை, கண்மணி கண்களாலே பிரமாதம் என சைகை காட்டினாள். ஏனோ சேலை கழன்று விழுந்து விடுமோ என்ற அச்சம் ரம்யாவை இயல்பாக இருக்கவிடாமல் தடுத்தது.
அதே பயத்திலேயே சிம்போசியம் நடந்த ஆடிட்டோரியத்திற்குச் சென்றாள். வகுப்பில் ஒவ்வொரு மாணவியும் தத்தம் சேலைகளையும் அலங்காரத்தையும் தோழிகளுக்குக் காண்பித்துக் கொண்டிருக்க, அமைதியாக ஒரு இருக்கையில் போய் அமர்ந்தாள். முதல் நாள் முழுவதும், செமினார் மற்றும் பேப்பர் பிரெசென்டேசன்கள், தேனீர் நேரம் மாலையோடு முடிவு. இரண்டாம் நாள் காலையில் போட்டிகள், மாலையில் பரிசு வழங்கல் மற்றும் இரவு உணவு. இவ்வாறு சிம்போசியம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது.
காலையில் சில செமினார்கள் முடிந்தது, சிற்றுண்டி இடைவேளை வந்தது. அவளின் சீனியர் மாணவிகள் அவளை அழைத்தனர். “என்ன ரம்யா? எல்லாரையும் சேலையில் வர வச்சிட்ட! பெரிய ஆளுதான்! நீ சொன்னா உன் கிளாஸ்ல எல்லாரும் சரின்னு கேட்பாங்க போலயே! என்று சொல்ல, “அப்படிலாம் இல்லீங்கக்கா! சீனியர்ஸ் விருப்பம். நம்ம டிப்பார்ட்மென்ட் கேர்ள்ஸ் ஒற்றுமையைக் காட்ட ஒரு சின்ன சந்தர்ப்பம்னு சொன்னோம்! எல்லாரும் கேட்டுகிட்டாங்க! என்று மிகவும் சாமர்த்தியமாக அவர்களைப் புகழ்ந்து பதிலைச் சொன்னாள்.
“ம்! நல்லாவே பேசுற! சும்மாவா உங்க கவிதா மேம் டிப்பார்ட்மென்ட்ல புகழந்துட்டு இருக்க்கங்க! திறமை தான்! என்று சொல்லிய ஒரு சீனியர் அக்கா, தொடர்ந்து ,“ஆமா! நீ மட்டும் என்ன அப்படியே பொம்மை மாதிரி இருக்க? நீ நடக்கிறத பார்த்தா உனக்கும் வலிக்காம சேலைக்கும் வலிக்காம நடக்கணும்ன்னு ரொம்ப மெனக்கெடுவ போல!” என்றார் கிண்டலாக. அவளின் பயம் அவளுக்கு. வரேங்கக்கா என்று பொதுவாக விடைபெற்று நகர்ந்தாள்.