இறங்கியது.
குயிலியை எதிர்த்துப் போராடியவனை கூர்ந்து கவனித்தால் அவன் குயிலியை தாக்குவதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை... குயிலியிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சி மட்டுமே அவன் மேற்கொண்டு இருந்தான் என்பது தெளிவாக புரிகிறது. ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் குயிலி இல்லை. அவள் எண்ணம் முழுவதுமே எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு இவன் இடையூறாக இருக்கிறான். அதனால் இவனை தாக்கிவிட்டாவது நான் தப்பித்துவிட வேண்டும் என்ற ஒரு வேகம் மட்டுமே இருந்தது.
இன்னும் 40 நொடிக்கு 5 நொடியே மீதி இருக்க குயிலியின் தாக்குதல் வேகமாக அவனின் அடிவயிற்றில் பதிய அதை தடுக்க அவன் வருவதற்குள் குயிலின் அடி அவன் வயிற்றில் பலமாக இறங்கியது. அவன் சுதாரிப்பதற்குள் தாத்தாவை இழுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து அவள் வெளியேற அதற்குள் அந்த கதவு மூடப்பட்டது. மூன்றாவது அறையின் கதவு மூடப்பட போகிற நிலையில் வேகமாக அங்கிருந்து தாத்தாவை இழுத்துக்கொண்டு வெளியேறியவள் பெருமூச்சு வாங்கினாள்.
தாத்தா நாம் இப்போது மூன்று அறையையும் கடந்து விட்டோம். இனி இந்த படிக்கட்டின் வழியாக மேலே செல்ல வேண்டியதுதான் பாக்கி. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அங்கு நமக்கு இதைவிட பெரிய ஆபத்து இருக்கலாம். அதனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் மன தைரியத்துடன் என் பின்னே வாருங்கள் என்று அவள் மெதுவாக படிக்கட்டில் ஏற துவங்கினாள்.
பூனை நடக்கும் போது கூட ஒரு சிறிய அதிர்வை உணரலாம் போல... ஆனால் இங்கு குயிலி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அதை விட மெதுவாக இருந்தது.
ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைத்து மேலே வர அவளையே தொடர்ந்து பின் வந்தார் ஆசீர்வாதம் தாத்தா.
படிக்கட்டுகள் முடிய அந்த இடத்தில் சிறிய சதுர வடிவிலான துவாரம் போன்ற ஓரிடம் தெரிய அதைப்பற்றி பிடித்து வெளியே வந்தாள் குயிலி... குயிலியை தொடர்ந்து தாத்தாவும் அதன் வழியே நுழைந்து வெளியே வந்தார்.
இருவரும் வெளியே வந்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள இருவர் உதட்டிலும் ஒரு புன்சிரிப்பு தோன்றி மறைந்தது.
அந்த அறை மிக பிரமாண்டமாக காட்சியளித்தது. அந்த இடத்தில் நின்று அந்த அறையிலிருந்து வெளியேறுவதற்கான வாசல் எங்கு இருக்கிறது என்று அந்த அறையை சுற்றி நோட்டமிட்டாள் குயிலி.