தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்
சந்தியா பஸ்ஸில் இருந்து இறங்கி உற்சாகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் ஒரு துள்ளல் இருந்தது.
ஹேய் சந்தியா... வீர நடை போட்டு போறீங்க.. ஜனனி கல்யாணம் முடியவும் உங்க ஆளை கண்டு பிடித்தாச்சோ என்றான் போஸ்ட் மேன்...
திரும்பி பார்க்காமலே யாரென்று புரிந்து கொண்டாள் சந்தியா. அதனால் கண்டு கொள்ளாமல் நடந்தாள்.
சந்தியா... போகும் போது லக்கேஜ் இல்லை.. இப்போது லக்கேஜ் இருக்கு... உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டானா சைக்கிளை பின்னால் உருட்டி கொண்டே வந்தவன் கேட்டான்.
அவளிடம் இருந்து நல்ல பல வார்த்தைகளால் திட்டு வரப்போகுது என்று புன்சிரிப்புடன் பின் தொடர்ந்தவன் எதிர் பார்க்காத வகையில் அவன் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தாள். அவளது மறுகை அவனை அடிக்க ஓங்கி இருக்க சைக்கிளை விட்டு விட்டு அக்கா... என்று பதட்டமாக கூறியவன் சாரிக்கா என்றான் நொடியும் தாமதிக்காமல்...
உனக்கு நல்ல நேரம்... தப்பிச்ச... எனக்கு ஆள் இருந்தா உனக்கு என்ன... இல்லைனா உனக்கு என்ன... நான் என்ன செய்றேன் என்று என்னையே நோட்டம் விடுறியா என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
தன் பேக்கை தூக்கி கொண்டு சந்தியா நடக்க சிறிது இடைவெளி விட்டு நடந்தவன் எதுவும் பேசாமல் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரம் அமைதியாக வந்தவன் மெதுவாக அக்கா... தப்பா எடுத்துக்காதீங்க... தனியாக நடக்கிறீங்க... ஊர் போறது வரை துணைக்கு பேசிட்டு வரலாம்னு தான் வந்தேன். நீங்க பயமில்லாமல் தான் நடக்கீங்கனு தெரியும். ஆனாலும் துணைக்கு என்று இழுத்தான்.
இப்போதும் சந்தியா எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தாள்.
அக்கா... நீங்க எப்பவும் அடிதடி அதிரடியாக பேசுறதால நானும் அப்படி பேசினால் நீங்கள் ஜாலியா எடுத்து கொண்டு பேசுவீங்கனு நினைத்தேன். நான் தப்பா நினைத்து உங்க கிட்ட பேசலா... எனக்கு ஒரு அக்கா இருந்தால் என்று ஏதோ பேச வந்தவனை உன் அக்கா வெளியே போய் விட்டு வரும் போது இப்படி தான் உன் ஆளை பார்க்க போனியானு கேட்பியா என்ற சந்தியாவின் குரலில் கடுமை இருந்தது.
சாரிக்கா... தெரியாமல் பேசிட்டேன். இனி எப்போதும் உங்களை அக்கானு தான் கூப்பிடுவேன். உங்கள் தம்பி மாதிரி நினைத்து மன்னிச்சிடுங்க என்றவனின் வார்த்தைகள் அவன் உண்மையாக மன்னிப்பு கோருவதை உணர்த்த சரி.. பொழைச்சு போ என்றாள்.