தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்
மாப்பிள்ளை வீட்டார் வரப் போகும் அந்த ஞாயிற்றுக் கிழமை நெருங்க நெருங்க தேவநாதன் வீட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வழக்கம் போல் வீட்டையும், வாசலையும் சுத்தம் செய்யும் வேலையை கைலாஷிடம் ஒப்படைக்க வேண்டி, அவனை அழைத்த தேவநாதன் அவன் சொன்ன பதிலில் ஆடிப் போனார்.
“கைலாஷ்!...நீ என்னப்பா சொல்றே?...மார்க்கெட்டிங் டூர் போகப் போறியா?” திகிலுடன் கேட்டார்.
“ஆமாம்ப்பா...வெள்ளிக்கிழமை நைட் கிளம்பிப் போனா...வர எப்படியும் ஒரு வாரமாகும்!”
“ப்ச்...என்னப்பா?...அக்காவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஞாயிற்றுக் கிழமையன்னைக்கு இங்க வரப் போறாங்க!...அந்தச் சமயத்துல நீ இங்க இல்லாம இருந்தா எப்படிப்பா?”கவலையோடு கேட்டார் தேவநாதன்.
“நான் எதுக்குப்பா?...என்னையா பார்க்க வர்றாங்க?...அக்காவைத்தானே பார்க்க வர்றாங்க?”
“அப்படியில்லைப்பா...வீட்டுக்கு ஒரே பையன் நீ!...நீ இல்லாட்டி எப்படிப்பா?”
“இங்க பாருங்கப்பா!...என்னோட வேலையே மார்க்கெட்டிங்தான்!...கண்டிப்பா அப்பப்ப...இந்த மாதிரி திடீர் திடீர்னு மார்க்கெட்டிங் டூர் போக வேண்டி வரும்!...அது வரும் போது நான் போனாத்தான் எனக்குக் கொடுத்திருக்கற டார்கெட்டை நான் பிடிக்க முடியும்!...அதை விட்டுட்டு, “அக்காவைப் பெண் பார்க்க வர்றாங்க!...ஆட்டுக்குட்டியைப் பெண் பார்க்க வர்றாங்க!”ன்னுசொல்லிட்டு நான் டூர் போறதைத் தவிர்த்தேன்னா...எனக்கு வேலையே போனாலும் போயிடும்!...அதனால...ப்ளீஸ்...என்னோட நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்க அப்பா!” கைலாஷ் தன் நிலையைக் கடுப்போடு சொன்னான்.
அப்போது, உள் அறையிலிருந்து வேக வேகமாக வெளியே வந்த சுலோச்சனா, “அப்பா...அவன் போகட்டும் விடுங்க!...என்னால அவன் வேலைக்கு ஆபத்து வந்துடக் கூடாது!...உங்களுக்கு இப்ப அவன் எதுக்கு வேணும்?...வீடு...வாசலெல்லாம் சுத்தம் பண்ணனும்...அதுக்குத்தானே?..விடுங்க...அதை நானே செய்துடறேன்!” என்றாள் படபடவென்று.
“அதெப்படிம்மா?....நீ எப்படிம்மா செய்வே?”
“ஏன்?..என்னைத்தானே பெண் பார்க்க வர்றாங்க?...அப்ப நாந்தானே செய்யணும்?...” சொன்னவள் அடுத்த நிமிடமே அந்தக் காரியத்தில் இறங்க முனைந்தாள்.
அதைப் பற்றி சற்றும் கவலைப்படாதவனாய், தன் பேக்கை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினான் கைலாஷ்.
பேருந்து நிறுத்தத்தில் ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்டுடன், பஸ் வருவதற்க்காக காத்திருந்தான் கைலாஷ்.
“ஹலோ...கைலாஷ்...எப்படியிருக்கே?”