குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான் கைலாஷ். அவனுடைய கல்லூரிப் பேராசிரியர் தமிழ்மணி நின்றிருந்தார்.
பழைய மரியாதையை மறக்காதவனாய் சட்டென்று எழுந்து நின்றான் கைலாஷ். “சார்...நான் நல்லா இருக்கேன் சார்!...நீங்க எப்படியிருக்கீங்க சார்?”
“எனக்கென்னப்பா?...பொண்டாட்டியா...பிள்ளையா...குட்டியா?...அப்படியே காலம் போகுது!...அந்தக் காலத்தோட நானும் போய்க்கிட்டே இருக்கேன்!...”
கல்லூரியில் பணி புரியும் காலத்திலேயே பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானவர் அந்தப் பேராசிரியர் தமிழ்மணி. திருமணமே செய்து கொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாகவே காலம் கழித்தவரை பல வாய்கள்...எப்படியெல்லாமோ பேசின.
“டேய்...அந்த ஆளு தன்னோட டீன் ஏஜ்ல யாரையோ செமையா டாவடிச்சிட்டு இருந்திருப்பாரு!...கடைசில அவ டாட்டா காட்டிட்டுப் போயிருப்பா...அந்தக் காதல் தோல்வியினாலதான் கல்யாணமே பண்ணிக்காம இருக்காரு!...அந்த அளவுக்கு ட்ரூ லவ்!” இது மாணவர்களின் கமெண்ட்.
“ப்ச்...உண்மை என்ன தெரியுங்களா?...மனுஷனுக்கு உடல் நிலைல ஏதோ கோளாறு இருக்கு...இதை வெச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு...நாளைக்கு வர்றவளை “அந்த”விஷயத்துல திருப்தி படுத்த முடியாமப் போயிட்டுதுன்னா...அவ வேற எங்காச்சும் போயிடுவாள் அல்ல?...அதான் பிரச்சினையே வேண்டாம்னு மனுஷன் பிரம்மச்சர்யத்தைக் கடைப் பிடிக்கறாரு!” இது சக ஆண் பேராசிரியர்களின் சன்னக்குரல் கமெண்ட்.
“ஏய்...கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு வீட்டுச் சாப்பாடு!...கல்யாணம் பண்ணிக்கலேன்னா பல வீட்டுச் சாப்பாடு!...தமிழ்மணிசார் பல வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு ருசி கண்டவர்...அதான் அந்த லைனே போதும்னு திரியறார்!” இது சக பெண் பேராசிரியைகளின் “கிசு...கிசு” கமெண்ட்.
யார் யாரோ அவரைப் பற்றி எதையெதையோ பேசிய போதும், அதையெல்லாம் கொஞ்சமும் செவி மடுக்காமல் தனது கல்லூரிக் காலத்தில் பேராசிரியர் தமிழ்மணியை தனது ரோல் மாடலாக வைத்துக் கொண்டிருந்தவன் கைலாஷ். அவனே பல முறை நினைத்திருக்கின்றான், “ஏன் இவர் இப்படி கல்யாணமே பண்ணிக்காமலே இருக்கிறார்?” என்று. ஒரு முறை அவரிடம் நேரிலேயே கேட்க நினைத்துச் சென்று, கேட்காமலேயே திரும்பி வந்திருக்கிறான். இன்று வரை அவருடைய பிரம்மச்சர்யம் எல்லோருக்குமே சஸ்பென்ஸ்.
“என்னப்பா கைலாஷ் திடீர்னு அமைதியாயிட்டே?” தன் கையைத் தொட்டு பேராசிரியர் உசுப்ப,
பழைய நினைவுகளிலிருந்து மீண்ட கைலாஷ், “ஒண்ணுமில்லைங்க சார்..காலேஜ் டேஸை நினைச்சுப் பார்த்தேன்!” என்றான்.