“உனக்குப் பார்க்கணும்னு இருந்தா...அதோ அந்தச் சின்ன ஜன்னல் வழியா இங்கிருந்தே பாரு...போதும்!”
அதைக் கேட்ட அர்ச்சனா அக்காவைப் பார்க்க, அவளும் பார்வையால் கெஞ்சினாள்.
“ஓ.கே!...நீங்க சொல்றபடியே நடந்துக்கறேன்!...போதுமா?”
“அப்பாடா...இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு!” என்றபடி பார்வதி வெளியே செல்ல முயல,
“மம்மீ...எனக்கொரு டவுட்டு!” என்று வேண்டுமென்றே மழலைக் குரலில் அர்ச்சனா கேட்க,
“என்னடி டவுட்டு உனக்கு?” நின்று திரும்பிக் கேட்டாள் பார்வதி.
“ஒருவேளை அந்த மாப்பிள்ளை உன்னைப் பார்த்து... உன் அழகுல மயங்கி...மனசு மாறி...உன்னைத்தான் கட்டிக்குவேன்!னு சொல்லிட்டா?” என்று சொல்லி விட்டு அர்ச்சனா “கல...கல”வென்று சிரிக்க,
“சரியான குசும்புடி நீ!” அவளைச் செல்லமாய் முதுகில் சாத்தினாள் சுலோச்சனா.
ஆனால் பார்வதியோ அர்ச்சனாவை மூக்குடைக்கும் விதமாய், “சொல்லிட்டா என்ன?...அதான் நீ இருக்கியே?...அடுத்த நாளே அந்த ஆளு வேலை செய்யுற பல்லடம் மில்லுல போய் அவனை மானத்தைக் கெடுக்க!” என்றாள் “வெடுக்”கென்று.
அதுவரையில் ஜாலியாய் பேசிக் கொண்டு, சந்தோஷமாய் இருந்த அர்ச்சனாவின் முகம் சட்டென்று சுண்டிப் போனது.
அதைப் பற்றிக் கவலைப் படாமல், குரூரப் புன்னகையுடன் அறையை விட்டு வெளியே சென்றாள் பார்வதி.
தொடரும்...
Next episode will be published on 30th Jan. This series is updated weekly on Saturdays.