வரை சென்று வறண்டு போயிருந்தது. பக்கவாட்டில் திருகிக் கிடந்த அவன் முகத்தில் திறந்திருந்த கண்களில் இன்னமும் அந்த கடைசி நேர பீதி மிச்சமிருந்தது.
பாவம்...அந்தக் கடைசி விநாடியில் என்ன நினைத்திருப்பானோ?
பார்த்ததுமே புரிந்து கொண்டார் கோகுல்தாஸ் இது மேலேயிருந்து விழுந்த கேஸ் என்று. உடனே அனிச்சையாய் தன் தலையை உயரத் தூக்கி மேலே பார்த்தார்.
அவருடைய மிடுக்கான தோற்றத்தையும் மிகவும் ஷார்ட்டாக வெட்டப்பட்டிருந்த ஹேர் கட்டிங்கையும் பார்த்து விட்டு அவரை நெருங்கி வந்த ஒரு போலீஸ்காரர் “சார்...நீங்க டிப்பார்ட்மெண்ட் ஆளா?” கேட்டார்.
“நோ...நோ...நான் உங்க டிப்பார்ட்மெண்ட் இல்லை...சென்ட்ரல் எக்ஸைஸ் டிப்பார்ட்மெண்ட்!...அது சரி...இது எப்படி?...” கீழே கிடக்கும் அந்தச் சவத்தைக் காட்டிக் கேட்டார் கோகுல்தாஸ்.
“தெரியலை சார்!... விசாரிக்கணும்!... ஏ.சி.வந்திட்டிருக்கார்” என்றார் அந்தப் போலீஸ்காரர்.
“யாரு இப்ப ஏ.சி?.. பேரு என்ன?”
“தீனதயாள் சார்!... இதுக்கு முன்னாடி சேலத்துல இருந்தார் சார்!”
“இந்த ஆளோட டிரஸ்ஸைப் பார்க்கும் போது இவன் ஒரு செக்யூரிட்டி போலத் தெரியறான்.” பிரின்ஸிபால் வர்கீஸ் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல
“கரெக்ட்...கரெக்ட்” என்று அந்தப் போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தக் கார் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கி வேக வேகமாய் நடந்து வந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாள் கொஞ்சம் விக்ரம் நிறைய அஜீத்.
வந்தவர் குப்புறக் கிடந்த அந்தப் பிணத்தருகே நின்று சில நிமிடங்கள் யோசித்து விட்டு சொல்லி வைத்தாற் போல் மேலே அண்ணாந்து பார்த்தார்.
அவருடைய அந்தச் செய்கையைப் பார்த்த போலீஸ்காரர் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதாய் எண்ணி “ஆமாம் சார்..மேலிருந்துதான் விழுந்திருக்கான்!” என்றார்.
“அதெப்படி விழுந்திருக்கார்!..ன்னு சொல்லறீங்க?...யாராவது பிடிச்சுத் தள்ளிக் கூட விட்டிருக்கலாமல்ல?” ஏ.சி. “கணீர்”க் குரலில் தன் போலீஸ் கேள்வியைக் கேட்டதும்
“ஹி...ஹி” என்று வழிந்த போலீஸ்காரர் “அப்படியும் இருக்கலாம் சார்!” என்றார்.
“யாரு மொதல்ல பார்த்தது?...தகவல் கொடுத்தது?” ஏ.சி.தீனதயாள் பார்வையை நாலாப்புறமும் சுழற்றியவாறே கேட்டார்.