அழுதபடியே வந்தாள் ஒரு பெண். அவள் வாய் நிறைய வெற்றிலை. கண்களில் நேற்றைய விஸ்கி போதை இன்னும் மிச்சமிருந்தது.
அவளது சேலைக் கட்டும் ரவிக்கை இறுக்கமும், அவளைப் பற்றி வேறு ஏதோவொன்றை எடுத்தியம்பியன.
“யாரும்மா நீ?” ஏ.சி.தீனதயாள் தன் மெட்டல் குரலில் கேட்க
“கூட்டிப் பெருக்கறவ சார்!..தெனமும் காத்தால நான்தான் மொதல் ஆளா வந்து பெருக்குவேன்!...இன்னிக்கு அஞ்சே முக்காலுக்கே வந்திட்டெனுங்க...வந்து பார்த்தப்ப...செக்யூரிட்டி இதே மாதிரித்தான் கிடந்தாரு!...நான் மப்புன்னு நெனச்சுக்கிட்டு அவர் பக்கத்துல வந்து நின்னு
“எந்திரிய்யா...எந்திரிய்யா!”ன்னு கத்தினேன்...ஆள் எந்திரிக்கலை...அப்புறந்தான் கவனிச்சேன்...தலைக்குப் பக்கத்துல ரத்தம் கொளமாட்டம் தேங்கி நிக்கறதை!...பாத்ததும் கத்திக் களேபரம் பண்ணி பக்கத்து பில்டிங் செயூரிட்டியைக் கூப்பிட்டேன்...அவரு வந்து பார்த்திட்டுத்தான் போலீஸுக்குத் தகவல் சொன்னாரு!” ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டு குப்புறக் கிடக்கும் அந்தப் பிணத்தை ஒரு பார்வை பார்த்தாள்.
“அந்தப் பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி ஆள் இங்க இருக்காரா?” கூட்டத்தில் தேடியபடி கேட்டார் ஏ.சி.
“இருக்கேன் சார்!” அவனாகவே சொல்லிக் கொண்டு முன் வந்தான் ஒரு செக்யூரிட்டி ஆள். அம்பது...அம்பத்தி ரெண்டு வயதிருக்கும் அவனுக்கு. பார்வைக்கு வினு சக்ரவர்த்தியின் தம்பி போலிருந்தான்.
“ம்ம்ம்..நேத்திக்கு ராத்திரி நீதானே பக்கத்து பில்டிங்ல டியூட்டில இருந்தே?”
“ஆமாம் சார்!”
“இங்கிருந்து ஏதாவது சத்தம் கேட்டிச்சா?...சண்டை போடுற மாதிரி...ஓடுற மாதிரி...துரத்துற மாதிரி?”
“இல்லையே சார்!”
“ஒரு வேளை நீ தூங்கிட்டியோ?” ஏசி.சிரித்தபடியே கேட்டார்.
“இல்லை சார்...ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை...நான் பஞ்ச் பண்ணனும்!...பயோ மெட்ரிக் சிஸ்டம் வெச்சிருக்காங்க!”
“ஓ?” என்றவாறே தாடையைத் தடவிய ஏ.சி.தீனதயாள் “நேத்திக்கு ராத்திரி நீ இவரைக் கடைசியா எத்தனை மணிக்குப் பார்த்தே?”
“ஒரு ஒம்பது மணியிருக்கும் சார்!..எஃப்.எம்.லே பழைய பாட்டுக் கேட்டிட்டிருந்தார்