சார்!...பழைய பாட்டுப் பிரியர் சார்!”
“ம்..அப்பப் பேசினாரா?”
“ஆமாம் சார்!... “ஆயிரம் புதுப் பாட்டுக வந்தாலும் பழைய பாட்டுக்களை அடிச்சுக்கவே முடியாது!”ன்னாரு சார்!”
“அதுக்கப்புறம் அவரை நீ பார்க்கவே இல்லையா?”
“இல்லை சார்!...நான் போய் சாப்பிட்டுட்டு...என்னோட கேபின்ல உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டேன் சார்!”
தலையை மேலும் கீழும் ஆட்டியபடியே யோசித்த ஏ.சி.தீனதயாள் “விடு...விடு”வென்று பாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடிக்குப் போனார்.
அங்கிருந்து கீழே பார்த்து விட்டு ”ம்ஹூம்!...இங்கிருந்து விழச் சான்ஸே இல்லை!...ஏன்னா...இங்கிருந்து விழுந்திருந்தா...அந்த இடத்தில் விழுந்திருக்க மாட்டார்!...இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய்த்தான் விழுந்திருப்பார்!..ஸோ...மொட்டைமாடில இருந்து விழலை!...நான்காவது...அல்லது..மூன்றாவது ப்ளோர்ல இருந்துதான் விழுந்திருக்கணும்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு கிழே வந்தார்.
“ம்..காம்ப்ளக்ஸ் ஓனர் யாரு?..அவருக்குத் தகவல் சொல்லியாச்சா?”
“சொல்லியாச்சு சார்...வந்திட்டிருக்கார்!”
“எங்கிருக்கு அவர் வீடு?”
“ராஜீவ்காந்தி நகர் எக்ஸ்டென்ஷன் சார்!...அவர் பேரு சாம்பசிவம் சார்!...உடுமலைப்பேட்டைல ஒரு மில்லு வெச்சிருக்கார்!”
“ஓ.கே!” என்ற ஏ.சி. இரண்டு கான்ஸ்டபிள்களையும் அருகில் அழைத்து, அவர்களுக்கு சரமாரியாக கட்டளைகளை அடுக்கினார்.
அவர்கள் செயல்பாட்டில் இறங்க சிறிது நேரத்தில் ஃபாரன்ஸிக் ஆட்களும் மோப்ப நாயும் ஆம்புலன்ஸ் வேனும் வந்து சேர “மள..மள”வென்று ஃபார்மாலிட்டீஸை முடித்த கையோடு அந்தப் பிரேதம் அரசு மருத்துவமனை நோக்கிப் பயணமானது.
அந்த வேன் வெளியேறிய அதே நேரத்தில் காம்ப்ளக்ஸ் ஓனர் கார் அங்கு வந்து நின்றது.
நெடு..நெடு..வென்ற உயரத்தில் ஒல்லியான உடல்வாகுடன் வழுக்கையின் ஆரம்பத்தில் இருந்த அந்த நபர் காரை விட்டிறங்கியதும் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு நேரே ஏ.சி.தீனதயாளிடம் வந்தார்.
“சார்...நான் சாம்பசிவம்!...இந்தக் கம்ப்ளக்ஸ் ஓனர்” சுய அறிமுகத்தோடு கையை நீட்டினார்.