அவர் கையைப் பற்றி சம்பிரதாயமாகக் குலுக்கியவாறே அவர் முகத்தில் எதையோ தேடினார் ஏ.சி. போலீஸ் புத்தி.
“வந்து...எனக்கு இப்பக் காலைல ஆறு மணிக்குத்தான் தகவல் வந்திச்சு!...இது..இது..எப்ப...எத்தனை மணிக்கு நடந்திச்சு?” சாம்பசிவம் கேட்க
“மிஸ்டர்.சாம்பசிவம்...முதல்ல நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லுங்க...அப்புறம் உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன்!” தீனதயாள் கடுப்புடன் சொன்னார்.
“யெஸ் சார்!” முகம் மாறினார் சாம்பசிவம்.
“வந்து...இங்கிருக்கற செக்யூரிட்டீஸ் எப்படி?...நீங்க நேரடியா அப்பாயிண்ட் பண்ணிய ஆட்களா?...இல்லை ஏதாவது செக்யூரிட்டி சர்வீஸ்ல காண்ட்ராக்டா?”
“காண்ட்ராக்ட் சார்...“எக்ஸ்-ரே செக்யூரிட்டி சர்வீஸ்”காரங்க அனுப்பறாங்க!”
“ஸோ...இந்த செக்யூரிட்டி ஆளு பத்தி...எந்த டீடெய்ல்ஸும் உங்களுக்குத் தெரியாது...அப்படித்தானே?”
“யெஸ் சார்” சாம்பசிவம் பவ்யமாய்ச் சொன்னார்.
“ஓ.கே!...இங்க ராத்திரி எத்தனை மணி வரைக்கும் கடைக திறந்திருக்கும்?...யார் இதையெல்லாம் அட்மினிஸ்ட்ரேஷன் பார்க்கறாங்க?” தீனதயாள் குடைய
“ஐ...திங்க்!...ராத்திரி ஒன்பது மணிக்கு ஆல்மோஸ்ட் குளோஸ் ஆயிடும்னு நினைக்கறேன்!” வழிந்தபடியே அந்த சாம்பசிவம் சொல்ல
அவருடைய அந்த நழுவல் பதிலில் கடுப்பான தீனதயாள் “யாரைக் கேட்டா சரியான விபரங்கள் கிடைக்கும் மிஸ்டர் சாம்பசிவம்?” என்று அவசரமாய்க் கேட்டார்.
“கல்பனா”ன்னு ஒரு மேடம் இருக்காங்க...அவங்கதான் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர்...அவங்க கிட்ட நீங்க விசாரிச்சா...சரியான விபரங்கள் கிடைக்கும் சார்!”
“ம்...அவங்க உங்க எம்ப்ளாயீயா?”
“ஆமாம் சார்...கிட்டத்தட்ட ஆரம்பத்திலிருந்தே...அதாவது இந்த பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டேஜ்ல இருந்தே இருக்காங்க!”
“எத்தனை வருஷமா?”
“பத்து வருஷமா”
“ஓ.கே!...அவங்க எத்தனை மணிக்கு டியூட்டிக்கு வருவாங்க?”
தன் மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்த சாம்பசிவம் “சார்..இப்ப மணி எட்டரை!...ஒம்பதுக்கு வந்துடுவாங்க சார்!”