“இரு...எண்ணிப் பார்த்தே சொல்லிடறேன்!” என்ற அர்ச்சனா, “ஒண்ணு...ரெண்டு...மூணு...”என்று நிதானமாய் எண்ணி விட்டு, “மொத்தம் பதினேழு பேரு அவங்க சைடு ஆளுங்க!...தரகரைச் சேர்த்தா பதினெட்டு!”
“க்கும்...பொண்ணு பார்க்க வர்றதுக்கே கல்யாணச் செலவு ஆக்கிடுவாங்க போலிருக்கே?...பாவம் அப்பா!” என்றாள் சுலோச்சனா.
“ஏய்...முக்கியமான ஒண்ணை நீ இன்னும் கேட்கவேயில்லையே?” அர்ச்சனா திரும்பி தன் அக்காவைப் பார்த்துக் கேட்டாள்.
“என்னடி?”
“மாப்பிள்ளை எப்படி இருக்கார்?ன்னு நீ கேட்கவே இல்லையே?”
“க்கும்...இப்ப எனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!... “எப்படி இருந்தாலும் பரவாயில்லை!” என்கிற மன நிலைக்கு வந்திட்டேண்டி நான்!” சுலோச்சனாவின் வார்த்தைகளில் விரக்தி வடிந்தது.
“அப்படியெல்லாம் சொல்லாதக்கா!...உண்மையிலேயே மாப்பிள்ளை அழகாகவே இருக்கார்!...ம்ம்ம்...சரியாய்ச் சொல்லணும்னா....அறுபது சதவீதம் கவுண்ட மணி ஜாடை!...மீதி நாப்பது சதவீதம் வடிவேலு ஜாடை!” அர்ச்சனா வேண்டுமென்றே தமாஷாய்ச் சொல்ல,
“அய்யய்யோ...என்னடி குண்டைத் தூக்கிப் போடுறே?...நாம என்ன காமடிப் படம் எடுக்கவா நடிகர்களை செலக்ட் பண்றோம்?”
சுலோச்சனா பதறினாள்.
“அடிப்பாவி!...இப்பத்தான் சொன்னே?.. “எப்படி இருந்தாலும் பரவாயில்லை”ன்னு அப்புறம் ஏன் கூவறே?” என்ற அர்ச்சனா, மெல்ல முறுவலித்து விட்டு, “சும்மா உன்னைய சீண்டுவதற்காகச் சொன்னேன்!...மாப்பிள்ளை விக்ரம் சாயல்ல இருக்கார்!...என்ன நிறம் மட்டும் கொஞ்சம் குறைச்சல்!...கட்டை மீசை!...லேசாய்ப் பிதுங்கும் தொப்பை!..நிறைய பீர் அடிப்பார்னு நினைக்கறேன்!” என்றாள்.
அதைக் கேட்டு சுலோச்சனா “கல...கல”வெனச் சிரிக்க,
அந்தச் சிரிப்பை ஆஃப் செய்வது போல் அர்ச்சனா “அய்யய்யோ!...போச்சு...போச்சு...எல்லாம் போச்சு!” என்று அபாயக் குரலில் அலறினாள்.
“என்னடி.?..என்னாச்சு?...ஏன் இப்படிக் கத்தறே?...”
“வீட்டு ஓனர் சம்பூர்ணம் ஹாலுக்குள்ளார வந்திட்டாங்க!” என்றாள் அர்ச்சனா நடுங்கும் குரலில்.
தொடரும்...
Next episode will be published on 6th Feb. This series is updated weekly on Saturdays.