கோழியாய் சீறினாள் மகேஸ்வரியின் சித்தி.
“என்ன இங்க சத்தம்?” கேட்டபடியே வெளியே வந்தார் மகேஸ்வரியின் தந்தை. அப்பாவைக் கண்டதும் அவள் அழுகை இன்னும் அதிகமானது.
“அப்பா…அப்பா..சித்தி உள்ளார வரக் கூடாதுன்னு சொல்றாங்கப்பா”
மகேஸ்வரியின் அப்பா தன் மனைவியைப் பார்க்க அவள் “பின்னே?…போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளார போயிட்டு ராத்திரி பதினோரு மணிக்கு வெளிய வர்றா..இவளை சும்மாவா விட்டிருப்பானுக அந்தப் போலீஸ்காரனுக…ஆளு மாத்தி ஆளு போட்டி போட்டுக் கெடுத்திருக்க மாட்டானுக?” நரம்பில்லா நாக்கால் வரம்பில்லாது பேசினாள்.
அதைக் கேட்டு தந்தையும் அமைதியாயிருக்க நொறுங்கிப் போனாள் மகேஸ்வரி. “அப்பா ..நான் கெட்டுப் போகலைப்பா…நான் கெட்டுப் போகலைப்பா” கதறினாள்.
தெருவே வேடிக்கை பார்த்தது.
“அது செரி…கெட்டுப் போனவ ‘நான் கெட்டுப் போயிட்டேன்’னு ஒத்துக்குவாளா?” மகேஸ்வரியின் சித்தி கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, அனைவரும் அவள் சொல்வது ‘சரி’யென்றே தலையாட்டினார்கள்.
இதற்கு மேலும் அங்கு நின்று அவர்களோடு வாதாடிப் பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்து கொண்ட மகேஸ்வரி தன் விதியை நொந்தபடி இருட்டில் ஓடினாள்.
எப்படியாவது அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டு தன் மகளுக்கு அந்த நல்ல வரனை முடித்து விட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்த சித்திக்காரி கிடைத்த சந்தா;ப்பத்தை நல்ல முறையில் பயன் படுத்தி விட்ட திருப்தியில் வீட்டிற்குள் திரும்பினாள்.
“அப்பாடா…சனியன் ஒழிஞ்சது..இனி அந்த புரோக்கர் கொண்டு வந்த அந்த மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்குத்தான்…இப்பவே கல்யாண வேலைய ஆரம்பிச்சிட வேண்டியதுதான்”
(())
“சொல்லுங்க சார்…இதுக்கு மேலேயும் நான் உயிர் வாழனுமா சார்?…இல்ல வாழத்தான் முடியமா? ஊருக்குள்ளார போனா என்னையப் பார்த்து காறித் துப்ப மாட்டாங்களா?” மகேஸ்வரி ஆவேசமாய்க் கத்தினாள்.
நீண்ட நேரம் அமைதி காத்த இன்ஸ்பெக்டர் தீனதயாள், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவராய் “உனக்கு என் மேலே நம்பிக்கை இருந்தா என் கூட வா…நிச்சயமா உனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டறேன்”
ஆரம்பத்தில் மறுத்த அவள் தொடர்ந்து அவர் பேசிய பேச்சில் செழுமையான நம்பிக்கை கொண்டு அவருடன் செல்ல சம்மதித்தாள்.
(())