நோக்கி ஏ.சி.தீனதயாள் நடக்க
உதறும் கை கால்களுடன் உடன் நடந்தான் செக்யூரிட்டி சுந்தரம்.
சரியாக ஒரு மணி மூன்று நிமிடத்தின் போது
அந்தக் காம்ப்ளக்ஸின் மூன்றாவது தளத்தில் யாரோ “திமு...திமு”வென்று ஓடும் சப்தம் கேட்டது.
“சார்...சார்...சத்தம் கேட்குதுங்களா?” சுந்தரம் கிசு...கிசு குரலில் கேட்க
நின்று காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டார் ஏ.சி.தீனதயாள் “ஆமாம்..ஆமாம்...கேட்குது!” என்றபடி அண்ணாந்து பார்த்தவர் “உள்ளார யாராவது இருக்காங்களா?” கேட்டார்.
“இருக்க மாட்டாங்க சார்!...சாதாரணமாகவே ஒம்பது...ஒம்பதரைக்கெல்லாம் எல்லாக் கடைகளும் அடைச்சிடுவாங்க!...அதிலும் நேத்து வேற இங்க ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு...அதனால இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கே எல்லாக் கடைகளும் பூட்டிட்டாங்க!”
“அப்படியா?..”என்றவாறு தலையை உயர்த்தி மேலே பார்த்த ஏ.சி.யின் பார்வையில் மூன்றாவது தளத்தில் ஏதோ ஒரு கடைக்குள் ஆள் நடமாட்டம் இருப்பது கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்தது.
“என்ன சுந்தரம்...உள்ளார யாருமே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீங்க...அங்க பாருங்க தேர்ட் ஃப்ளோர்ல...அந்தக் கடைக்குள்ளார யாரோ நடந்திட்டிருக்காங்க!”
“சார்..இதைத்தான் சார் நான் சொன்னேன்!...நீங்க இப்ப உள்ளார போய்ப் பார்த்தீங்கன்னா...அந்தக் கடையோட கதவுல பூட்டு தொங்கிட்டிருக்கும்!”
“அப்புறம் எப்படி சுந்தரம் உள்ளார ஆளுங்க நடமாட்டம்?”
அவரருகில் வந்து குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டு “சார்...அது ஆள் நடமாட்டம் இல்லை சார்...பேய் நடமாட்டம்!” என்றான் சுந்தரம்.
புன்னகைத்த ஏ.சி ஏதோ சொல்ல வாயெடுத்த போது காற்றில் கலந்து வந்த அந்த அசூசையான நாற்றம் அவரது மூக்கை அடைத்து, கவனத்தை திசை திருப்பியது.
“அஞ்ஞே....ஞென்ன ஞிது?...திடீர்ன்னு இப்படியொரு ஞாத்தம்?” மூக்கை அடைத்திருந்ததால் தமிழை சீன மொழி போல் பேசினார்.
“சார்...மூக்கிலிருந்து கையை எடுத்து விட்டு...அந்த நாத்தத்தை சுவாசிச்சுப் பாருங்க!...பிணம் எரியுற வாடை!...முடி கருகுற நாத்தம்!...ரத்தம் சுண்டுற நெடி!”
ஏ.சி.மெல்ல விரலை மூக்கிலிருந்த எடுத்து விட்டு அந்த நாற்றத்தை சுவாசித்தார்.
“உண்மைதான்...இது...மனித உடல் எரிகின்ற ஸ்மெல்தான்!”