உறவினர்களுக்கு தகவல் தர அவளுக்கு உதவினர்.
மடகாஸ்கரில் பணி புரியும் சம்பூர்ணத்தின் மகன் சுரேஷுக்கு முதலில் தகவல் தரப்பட்டது. அவன் மறுநாள் மாலை வந்து விடுவதாய் பதில் அனுப்பினான்.
உள்ளூர் மற்றும் வெளியூர் உறவினர்கள் வந்து சேர்ந்த பின், ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகளை தேவநாதனும், நரசிம்மனும் சிரமம் பார்க்காமல் செய்து கொண்டிருக்க, பார்வதியும் அர்ச்சனாவும் சம்பூர்ணத்துடனேயே இருந்து அவளைக் கவனித்துக் கொண்டனர்.
மறுநாள் மாலையில் வந்திறங்கப் போகும் மகனுக்காக கஸ்தூரியின் சவமும், உறவினர்களும் காத்திருக்கத் துவங்கினர்.
அடுத்த நாள் காலையிலிருந்தே எல்லோர் விழிகளும் அந்த சுரேஷ் வரப் போகும் பாதையிலேயே பதிந்திருக்க, சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்து நின்ற அந்த டாக்ஸியிலிருந்து இறங்கிய சம்பூர்ணத்தின் மகன் சுரேஷைக் கண்ட அனைவரும் ஒரு கணம் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகி, பிறகு மீண்டனர்.
கையில் ஒரு ஊன்று கோலுடன் காரிலிருந்து இறங்கியவனுக்கு இடது கால் செயற்கை காலாயிருந்தது.
வலது காலை அழுந்த ஊன்றி, இடது செயற்கைகாலை ஊன்று கோல் துணையுடன் நிதானமாக ஊன்றிக் கொண்டு அவன் மெல்ல நடந்து வர,
“அடப்பாவமே...இது எப்ப நடந்திச்சு?”
“யாருமே சொல்லவேயில்லையே!”
“போகும் போது இந்தப் பையன்..ரெண்டு காலோடதானே போனான்?”
இப்படியாக எல்லோரும் ஆளாளுக்குத் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனரே தவிர, அப்போதைய சூழ்நிலையில் அதைப் பற்றிக் கேட்கவோ...விசாரிக்கவோ...யாருமே முயற்சிக்கவில்லை.
தேவநாதனும், நரசிம்மனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பார்வதியும், அர்ச்சனாவும் அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.
அன்று மாலையே கஸ்தூரிசாமியின் சடலம் மயானம் கொண்டு செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டபின் வீடு திரும்பிய சுரேஷிடம் மெல்ல விசாரிக்கத் துவங்கியது உறவினர் கூட்டம்.
“ஏம்பா சுரேஷு...என்னப்பா இதெல்லாம்?...எப்படிப்பா ஆச்சு?”
“ப்ச்!...மடகாஸ்கர்ல ஒரு கார் விபத்துல சிக்கி ஒரு காலை இழந்துட்டேன்!...பட்...கம்பெனி டியூட்டியின் போது அது நிகழ்ந்ததால...கம்பெனிக்காரங்களே எனக்கு அவங்க செலவுல ஒரு செயற்கைகால் பொருத்திக் குடுத்துட்டாங்க!...” என்றான் சுரேஷ் லேசான மன வருத்தத்துடன்.