அன்றைய தினம் ஆண்டுவிழா என்பதால் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையவும், வெளியேறவும், செக்யூரிட்டிகள் தடையாக இல்லை. பிற நாட்களாய் இருந்தால் டிபார்ட்மென்ட் ஹெச்ஓடி அல்லது பிரின்சிபால் கையெழுத்து கொண்ட அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே, கல்லூரி நேரத்தில் கேட் தாண்ட முடியும்.
ரம்யா பேருந்து நிறுத்தத்தை அடைந்த அதே சமயம் தினேஷ் வந்தான், சில நிமிடங்களில் பேருந்தும் வந்தது. அவன் கண் சைகை காட்டவும் பேருந்தில் ஏறினாள். அவள் ஜன்னல் அருகில் ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ள, கல்லூரியை விட்டு சற்று தூரம் பேருந்து செல்லவும், அவள் பக்கத்தில் வந்து தினேஷ் அமர்ந்தான். அவளுக்கும் இது ஒரு புது அனுபவம். தினேஷ் அவளை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டும் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டும் இருந்தான். “யூ லுக் ஸ்டன்னிங் ரம்யா!” என்றவன், இந்த ஸ்கை ப்ளூ சுடிதார், உன் தலையில இருக்கிற முல்லைப்பூ, நீ, உன் கண்கள், உன் உதட்டோர வெட்கப் புன்னகை, எல்லாமே இன்னிக்கு ரொம்ப அழகாத் தெரியுது. என் கையில் மட்டும் ஒரு தாலி இருந்தால், இப்பவே உன் கழுத்தில் கட்டி, அம்மா இங்க பாரு உன் மருமகள்ன்னு என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டுவேன் என மேலும் சொல்லவும், ரம்யா வெட்கப்பட, அதில் இன்னும் அழகாகத் தோன்றினாள் அவன் கண்களுக்கு.
அவன் அவளை வர்ணித்ததில் ஜன்னலோரக் காற்று இன்னும் குளிர்வதாய்த் தோன்றியது. இருவரும் வழியெங்கும் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்கள். மதுரை பேருந்து நிலையத்தில் இறங்கி, பேசிக் கொண்டே நடந்து சென்று மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தார்கள். வரிசையில் நின்று அம்மனின் தரிசனத்துக்குக் காத்திருந்தார்கள். அம்மனின் சன்னதி, கண்களை மூடி மனமுருகி வேண்டினாள் ரம்யா, “கல்யாணத்துக்கு ஆசி கொடும்மான்னு வேண்டுற அளவு வயசு எனக்கு வந்திருச்சான்னு தெரியல அம்மா! தாயே மீனாட்சி! என்ன தடை வந்தாலும் அதையும் தாண்டி, தினேஷ் தான் என் கணவனா வர அருள் கொடும்மா! என்று மனதார நினைக்க, கண்களில் நீர் துளித்தது. கற்பூர ஆரத்தி முடிந்து, அர்ச்சகர் அனைவரின் கைகளிலும் வரிசையாகக் குங்குமம் கொடுத்துக் கொண்டே வந்தார். முதலில் தினேஷின் கையில் கொடுத்தவர், சற்று நிதானித்து அவளைப் பார்த்து குங்குமத்தை நீட்டினார்.
தொடர்வேன்
Next episode will be published on 21st Mar. This series is updated weekly on Sunday mornings.